![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு
தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
![Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு Budget 2024 Confederation of Indian Industry Welcomes Central Govt Interim Budget Coimbatore News- TNN Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/fa2824735010656e0b69692b9b77e3471706775537166188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, தனிநபர்களுக்கான தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவரப்போவதில்லை என, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இறக்குமதி சேவை உள்ளிட்ட அனைத்திற்குமான நேரடி மற்றும் மறைமுக வரி என எதிலும் மாற்றம் இருக்காது, தற்போது இருக்கும் சூழலே நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக கோவை சுங்கம் பகுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவ்வமைப்பை சேர்ந்த செந்தில் கணேஷ், ”இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானம், சாலை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்தாக அமையும். உலக அளவில் டிஜிட்டல் முதலீடுகளில் முதலிடத்தில் நாம் உள்ளோம். டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். டீப் டெக் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் அதிகரித்தாலும், சாதாரண ரயில்களும் இயக்கப்படும். சோலார் எனர்ஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில்களுக்கு என தனியாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவ்வமைப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன், “கடந்த 5 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பட்ஜெட்டில் 3 ரயில் காரிடர்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ரயில்வே காரிடர் திட்டம் வரவேற்கத்தக்கது. கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கோவை விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். விவசாய பொருட்களை சேகரித்து வைக்க நிதி ஒதுக்கீடு செய்வது வரவேற்கத்தக்கது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால் சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ரவி என்பவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் சென்று கொண்டுள்ளது. இ பஸ், டூரிசம் மேம்படுத்துதல் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. இடைக்கால பட்ஜெட் என்பதால் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளரும். 2030 ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர் எக்னாமி என்ற இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய 12 சதவீத வளர்ச்சி அடைய வேண்டும். திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை சாவலாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)