உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!
வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம். வழுக்கியவர்கள் பேசலாமா ? கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் என வைரமுத்துவை கஸ்தூரி சாடியுள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்ததை கண்டித்த கவிஞர் வைரமுத்துவுக்கு நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் மாளிகை விழா
சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருவள்ளுவர் திருநாள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இடம்பெற்ற பேனர் மற்றும் போட்டோவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தவெக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை செயலுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த தலைவர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆளுநர் செயலுக்கு வைரமுத்து விமர்சனம்
இதற்கிடையில், “ஆளுநர் குடியிருக்கும் மக்கள் மாளிகைக்குச் சில கேள்விகள்” என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப் பூச்சு? .. திருவள்ளுவர் மானுடத்தின் பொதுச்சொத்து.. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ என்று பாரதியால் பொதுமைப்படுத்தப்பட்ட புலவனுக்கு திருநீறு என்ற உள்ளூர் அடையாளம் எதற்கு?
தர்மார்த்த காம மோட்சம் என்ற நாற்பொருளிலிருந்து விடுபட்டு அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளை மட்டுமே முன்னிறுத்தியவனுக்கு உருத்திராட்சம் என்ற உருட்டுமாலை தேவையா?.. அண்டமெங்கும் விரிந்திருக்கும்
ஆகாயம் என்று கருதப்படும் வள்ளுவரை மதம் என்ற சின்னச் சிமிழுக்குள் அடக்குவதுவரலாற்றின் வழு இல்லையா?
மெய்த் தமிழர்கள்மீண்டும் மீண்டும் எதிர்த்துக்கொண்டிருக்கஆளுநர்கள் மீண்டும் மீண்டும்அதே செயலைச் செய்வதுஉங்கள் அதிகாரத்தால் எங்களைக் காயப்படுத்துவது ஆகாதா?.. அன்புகூர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்; தாங்கமாட்டார்கள் தமிழர்கள். வள்ளுவரை வாழ விடுங்கள்” என தெரிவித்தார்.
Also Read: கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கஸ்தூரி கடுமையான பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, “இது வைரமுத்து அவர்களை நோக்கிய தனிமனித தாக்குதல் இல்லை. அவரின் கேள்விக்கான பதில். வள்ளுவனின் வாக்குப்படி நடப்பவர்கள் பேசினால் பொறுக்கலாம். வழுக்கியவர்கள் பேசலாமா ? கண்டவரும் கருத்து சொல்வதை காது கொடுத்து கேட்பது சனாதனத்தில் மட்டுமே சாத்தியம் . கட்சிக்காரன் காட்டிவிட்டால் காவி கட்சிக்கு சொந்தமா? பச்சை நிறம் சிலரின் கொடிக்கு மட்டுமே சொந்தமா ? காமுகர்களையும் கயவர்களையும் பொருத்துப்போவது கடவுளுக்கு களங்கமா?
உருத்திராட்சம் வெறும் உருட்டுமாலையாம் . திருநீறு குங்குமம் கூடாதாம் ... குல்லா போடலாமா? அங்கி அணியலாமா ? வள்ளுவனை வாழ விடவேண்டுமாம். அவர்ச்சொல் படி வாழுங்கள் முதலில். புலால் மறுத்தல் , பிறனில் விழையாமை, கள் உண்ணாமை இதை பின்பற்றுங்கள்,பேசுங்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















