Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியாக கைது செய்யப்பட்டிருப்பது ஆணவத்தின் உச்சமாக பார்க்கிறேன் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

உதயநிதி எந்த தவறும் செய்யாத நிலையில் அவரை கைது செய்திருப்பது ஆணவத்தின் உச்சம் என திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைப் செயலாளர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
அவதூறு குற்றச்சாட்டும், உதயநிதி கைதும்
தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பெண் நடிகையை குறிப்பிடும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் நேற்று உதயநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவரின் கைது செய்தி மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி செயலை கண்டித்தது. அதேசமயம் திமுக முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடியது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உதயநிதியை கைது செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்றும் தெரிவித்தார். இன்று இரவுக்குள் உதயநிதி விடுவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட, அதன்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
முதலமைச்சர் விஜயின் அதிகார துஷ்பிரயோகம்
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திவ்யா சத்யராஜ், "எந்த தவறும் செய்யாத ஒருவரை கைது செய்வது அநியாயம்,அராஜகம்,அக்கிரமம். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக என்றைக்கும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அதிகாரம் என்பது இன்று இருக்கும் நாளை இருக்காது.
நான் இந்த விஷயத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்கிறேன். இந்த விஷயத்தில் உதயநிதி பேசியதில் தவறு இல்லை என தெரிவிக்கிறேன். மேடை நாகரிகத்துடன் தான் அவர் பேசினார். அதில் எந்த இரட்டை அர்த்தமும் இல்லை. உதயநிதி நடிகை உட்பட எந்த ஒரு பெயரையும் உச்சரிக்கவில்லை. எத்தனை தடவை சொன்னாலும் அவர் செய்வது தவறில்லை.
Also Read: Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியாக கைது செய்யப்பட்டிருப்பது ஆணவத்தின் உச்சமாக பார்க்கிறேன். 12 மணி வரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதனை மீறி கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றது மிகவும் தவறான விஷயம். இது ஜனநாயக நாடு. முழுக்க முழுக்க முதலமைச்சர் விஜய் தனது பதவியை தவறாக பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















