என்னால் ஐந்து நபர்களின் பெயர்களை சொல்லமுடியும்..வளர்ச்சியை தடுப்பவர்கள் பற்றி சிவகார்த்திகேயன்
தனது வளர்ச்சியை சிலர் தடுக்கிறார்கள் என அண்மையில் சிவகார்த்திகேயன் பேசியிருந்த நிலையில் இதுகுறித்து தெளிவாக விளக்கமளித்துள்ளார்

தாய்கிழவி படத்தின் ரிலீஸூக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தனது வளர்ச்சியை தடுப்பதாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். தன்னால் அந்த நபர்களின் பெயர்களை சொல்லிவிட முடியும் ஆனால் யாரையும் குறை சொல்ல தான் வரவில்லை என்று அவர் மதுரையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக நடிக்கும் சேயோன் திரைப்படத்தையும் இவர் இயக்கவிருக்கிறார். தாய்கிழவி படக்குழுவினர் இன்று மதுரை சென்று ரசிகர்களுடன் படத்தை பார்வையிட்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் அண்மையில் தாய்கிழவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார்
நான் குறை சொல்ல வரவில்லை
அண்மையில் தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நான் யாருடனும் இங்கு போட்டி போட வரவில்லை என்னை வளரவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். இதே விஷயத்தை சிவகார்த்திகேயன் பல மேடைகளில் ஏற்கனவே பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை யார் தான் தொந்தரவு செய்வது என சமூக வலைதளங்களில் பலர் மீம் வெளியிட்டார்கள்.
மதுரை பத்திரிகையாளர் சந்திப்பின் போது உங்களை யார் தொந்தரவு செய்கிறார் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் " எல்லோரும் இதைப் பற்றிதான் கேட்கிறார்கள். நான் சொன்னா, அது யூடியூப்ல கன்டென்ட் ஆகிடும். யாரையாவது குறை சொல்றதுக்காக நான் இதைச் சொல்லல. என்னை நேசிக்கிறவங்க, அவங்க ஆதரவுல நான் சமாளிச்ச கஷ்டங்களைப் புரிஞ்சுக்கணும்னுதான் நான் மேடையில சொன்னேன்..நான் இங்க குறை சொல்ல வரல. நான் இங்க ஐந்து பேரோட பேரைச் சொல்லி, அதை ஒரு தலைப்புச் செய்தியாக்க முடியும். கஷ்டங்களை எப்படி சமாளிப்பதுன்னு மட்டும்தான் நான் சொல்ல விரும்புறேன். அது குறைந்தது நான்கு ரசிகர்களைச் சென்றடைஞ்சு, அவங்களுக்கு ஊக்கம் கொடுத்தா, அதுவே எனக்குப் போதும்.























