ரஹ்மான் யாரிடமும் வேலை கேட்டு பிச்சை எடுக்கல..கங்கனா ரனாவத்தை வெளுத்த பிரகாஷ் ராஜ்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய கருத்திற்கு பல தரப்பிடம் இருந்து விமர்சனங்கள் வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ரஹ்மானுக்கு ஆதரவாக பேசினார்

ஏ ஆர் ரஹ்மான் 2 ஆஸ்கர் விருது வாங்கியபோது நீங்கள் அதில் பெருமை கொண்டவர்கள் உண்மையை பேசியதால் அவரை தேசதுரோகி என்று அழைக்கிறார்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். ரஹ்மானை விமர்சித்து பதிவிட்ட நடிகை மற்றும் எம்.பி கங்கனா ரனாவத் குறித்து இந்த பேட்டியில் பிரகாஷ் ராஜ் பேசினார்
அண்மையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாலிவுட்டில் நிலவும் பிரிவினை வாதம் குறித்து பேசினார். இதனால் பல கலைஞர்களுக்கு போதுமான வேலை கிடைப்பதில்லை என்று ரஹ்மான் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ரஹ்மானின் கருத்திற்கு பல்வேறு திசைகளில் இருந்து விமர்சனங்கள் கிளம்பின. பல்வேறு பாலிவுட் திரைபிரபலங்கள் ரஹ்மான் கருத்தை கண்டித்தனர் . நடிகை மற்றும் பாஜக எம்பி ஆன கங்கனா ரனாவத் ரஹ்மானை கடுமையாக தாக்கி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தான் நடித்த எமர்ஜென்சி படத்தை பிரச்சார படம் என்று சொல்லி ரஹ்மான் இசையமைக்க மறுத்ததாகவும் அவரை விட வெறுப்பை காட்டும் ஒரு நபரை தான் பார்த்தது இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பட வாய்ப்புகள் இல்லாததால் ரஹ்மான் இந்த மாதிரியான வெறுப்பை பரப்புகிறார் என ரஹ்மான் மீது கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார்.
பிரகாஷ் ராஜ் ஆதரவு
கேரள இலக்கிய விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசியபோது ஒருவர் உண்மையை பேசினால் அவர் எப்படி விமர்சிக்கப்படுகிறார் என்று பேசினார். அப்போது ரஹ்மான் குறித்து பேசுகையில் " தாய் மண்ணே வணக்கம் , ஜெய் ஹோ போன்ற பாடல்கள் வெளியானபோதும் , இரண்டு ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் வென்றபோதும் நீங்கள் கொண்டாடினீர்கள். அவர் வேலைக்காக இரைஞ்சவில்லை. அந்த நிலையை அவர் கடந்துவிட்டார். அவர் இதுதான் தற்போதைய நிஜம் என்று ஒரு கருத்தை சொன்னார். அதனால் எவ்வளவு பெரிய பிரளயம் உருவாகியிருக்கிறது என்று பாருங்கள். தன்னுடைய படத்தில் ரஹ்மான் பணியாற்ற மறுத்துவிட்டார் என்பதற்காக கங்கனா ரனாவத் அவரை தேசத் துரோகி என்று கூறுகிறார். தன்னுடைய பிரச்சார படத்தை ஒரு கிளாசிக் படம் என்று அவர் முன்வைக்கிறார். " என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.























