Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
தனது ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷின் அரசியல் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வேறோரு கட்டத்திற்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த நடிகரும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்று கூறிவந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அச்சாரம் பாேடும் தனுஷ்:
விஜய் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தமிழ்நாட்டில் நடிகர்கள் பலருக்கும் உள்ளே இருந்த அரசியல் கனவு அதிகளவில் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதில் மிக வெளிப்படையாக தனது அரசியல் பயணத்திற்கான பணியைத் தொடங்கியிருப்பவர் நடிகர் தனுஷ்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வழங்கிய செயல்திட்டங்கள், பணிகள் ஆகியவை அனைவருக்கும் அவரது அரசியல் வருகைக்கான அச்சாரத்தை வெளிப்படுத்தி காட்டியது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளார் தனுஷ். இது அவரது அரசியல் வருகைக்கான பணியை அவர் தீவிரப்படுத்தியிருப்பதை காட்டி வருகிறது.
சட்டமன்றம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை:
கோவை மட்டுமின்றி இந்தாண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனுஷ் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்கள் சேரக்கையை தீவிரப்படுத்தவும் தனுஷ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக மட்டுமின்றி தொகுதி வாரியாக தனுஷ் தனது மன்றத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, தனது அரசியல் வருகைக்கு விஜய்யின் பாணியை பின்பற்றவும் தனுஷ் திட்டமிட்டுள்ளார். விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலமாக ஏராளமான நலத்திட்ட உதவி, ரத்ததான முகாம், அன்னதான உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொண்டார். அதேபோல, தனுஷிம் தனது ரசிகர் மன்றம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
சமூக வலைதளம்:
இதுமட்டுமின்றி, விஜய்யின் அரசியல் வெற்றிக்கு சமூக வலைதளம் மிகப்பெரிய பலமாக இருந்தது. தனுஷ் அதே போல, தனக்கு ஆதரவாக சமூக வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். தனுஷைக் காட்டிலும் விஜய்க்கு பன்மடங்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அவர்கள் தன்னிச்சையாகவே விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.
ஆனால், தனுஷிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் திமுக, தவெக ஆகியோருடன் மோதும் அளவிற்கு இல்லாதது அவருக்கு பலவீனமாக உள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களை தீவிரமாக செயல்பட வைக்கவும், மக்களின் ஆதரவைப் பெறவும் தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
கண்காணிக்கும் விஜய்:
தனுஷின் அரசியலில் ஈடுபட மிகத்தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில், அவரது செயல்பாட்டை ஆளுங்கட்சியான தவெக மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தவெக மட்டுமின்றி பெரிய கட்சிகளான திமுக, அதிமுக-வும் கண்காணித்து வருகின்றனர். தனுஷின் அரசியல் நகர்வுகள், அவர் மற்றும் அவரது ரசிகர்களின் சமூக வலைதள செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாக கொடியை அறிமுகப்படுத்தி தனது ரசிகர்கள் மத்தியில் அரசியல் கலந்த பேச்சை பேசியது முதலே இணையத்தில் விஜய் ரசிகர்களுடன் தனுஷ் ரசிகர்கள் மோதல் அரங்கேறத் தொடங்கிவிட்டது. தனுஷின் செயல்பாடுகள் 2031ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் அவரது நகர்வுகள் எப்படி இருக்கும்? என்றும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















