படப்பிடிப்பில் சண்டை பாதியில் விலக நினைத்தேன்...சசிகுமார் கொடுத்த அடையாளம்..இயக்குநர் பிரேம்குமார் பகிர்ந்த தகவல்
தான் இயக்குநராவதற்கு முன் ஒளிப்பதிவாளர் என்கிற அடையாளம் தனக்கு கிடைத்ததற்கு சசிகுமார் தான் காரணம் என 96 பட இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் , ரவிகுமார் , பாலா , லிங்குசாமி , பிரேம்குமார் , விஜய் மில்டன் , உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய 96 மற்றும் மெய்யழகன் பட இயக்குநர் பிரேம்குமார் நடிகர் சசிகுமார் தனக்கு செய்த உதவி குறித்து பகிர்ந்துகொண்டார்.
மை லார்ட் பற்றி பிரேம்குமார்
ராஜுமுருகனை நான் இன்று தான் நேரில் பார்க்கிறேன். நேற்று தான் போன்ல பேசினேன். ஆனா அவரை எனக்கு நல்லா தெரியும் – அவர் படங்கள் மட்டுமல்ல, அவர் வேலை செய்யும் விதமும்,ஒரு ஊர் அவரை எப்படி கொண்டாடுகிறது என்பதுமே அவருடைய சினிமாவை சொல்லிடும். நான் என் படத்தை அவர் ஊரில் எடுக்கும் போது அங்கு அவருக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு இயக்குநரை இவ்வளவு மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அது கண்டிப்பா அவர் சொல்ற கருத்துக்காகத்தான்.
சசிகுமார் சார் உடன் ராஜுமுருகன் படம் பண்ணுறாங்கன்னு கேட்டாலே, கதை என்ன, ஜானர் என்ன, பட்ஜெட் என்ன இதெல்லாம் தெரியாமலேயே “இந்த படம் நல்லா இருக்கும்”ன்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும். அந்த நம்பிக்கையே பெரிய விஷயம். நான் இந்த படத்தை இன்னும் பார்க்கல. ஆனா இந்த கூட்டணி இருக்கிறதாலேயே இந்த படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படக்குழுவிலுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சசிகுமார் செய்த உதவி
சசிகுமார் நடித்த சுந்தரபாண்டி படத்திற்கு நான் தான் கேமராமேன். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு பிரச்சனை காரணமாக நான் படத்தில் பாதியிலேயே விலக நினைத்தேன். சசிகுமார் சார் தான் என்னை சமாதானப்படுத்தி படத்தை முடிக்க வைத்தார். அப்போது அவர் அதை எனக்காக தான் செய்திருக்கிறார். நான் ஒரு இயக்குநராவதற்கு முன் சுந்தரபாண்டி படம் தான் ஒளிப்பதிவாளராக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. என்னுடைய வளர்ச்சிக்கு அந்த படம் முக்கியம் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. " என்று பிரேம்குமார் தெரிவித்தார்.























