CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி நீங்கள் மட்டும் கிடையாது. உங்களை விமர்சித்தல் உங்களை மட்டும் விமர்சிப்பதாகும். தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாகாது என வினோதினி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியது ஏற்புடையதாகா இல்லை என நடிகை வினோதினி வைத்தியநாதன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வென்ற நிலையில், சட்ட விதிகளின்படி திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அவர் ஜூன் 1ம் தேதி திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தன் மீதும், தவெக அரசு மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பேச்சை நடிகை வினோதினி வைத்தியநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சியில் முதல்வர் விஜய் அவர்கள் செய்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், திமுக வெறுப்பு, திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை, அதாவது, ஆயிரம் முறை அரைத்த மாவை விடுத்துப்பார்த்தால், அவருடைய பேச்சு சில இடங்களில் ஏற்புடையதாக இல்லை.
இதனை ஆக்கப்பூர்வமான விமர்சனமாகக்கூட இருக்கலாமென்று எப்பொழுது ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை.அவரது பேச்சின் சில பகுதிகள் ஏன் அருவருக்கத்தக்க வகையில் இருந்தன என்று எனக்கு தோன்றியது. அதாவது, கவர்ச்சியால் மக்கள் எனக்கு ஓட்டு போட்டார்களாம். கவர்ச்சினா நான் என்ன.. என்று அந்த முடிக்காமல் விட்ட வாக்கியம். முதல்வர், தான் ஒரு நடிகராக இத்தனை ஆண்டுகள் இருந்த நிலையில், இப்படி அர்த்தப்படுத்துவது, ஆண் உடலையோ பெண் உடலையோ உருவகம் செய்யும் விதமாக இருக்கிறது என்று உணர்ந்து அவ்வாறான பேச்சை தவிர்த்திருக்க வேண்டாமா?
இரண்டாவது பிரச்சனை வாயில் நல்லா வருது, எதாவது சொல்லிடப்போறேன், என்று சொல்கிறார். இதெல்லாம் நீர் வீற்றிருக்கும் பதவியின் மாண்பைக்குறைக்கும் வார்த்தைப்பிரயோகம். எழுத்தாளர்களே, தயவுசெய்து இப்படியெல்லாம் எழுதிக்கொடுக்காதீர்கள்.
திரும்பவும் சொல்கிறேன். இங்கு யாரும் தூயவரோ தீயவரோ கிடையாது. மத்தியில் பாஜக இதைத்தான், இந்துக்கள் vs இந்துக்கள் அல்லாதோர், இந்துக்கள் கஷ்டத்தில், ஆபத்தில் இருக்கின்றனர் போன்ற பிரிவினைவாத மனநிலையை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து, இன்று வரை அந்த பொய்யை உண்மை என்று வெகுஜன மக்களை நம்பவைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆட்சியைத்தக்க வைத்தலுக்காக எடுத்த ஆயுதம் இன்று உபியிலும் பிஹாரிலும் மதக்கலவரத்தைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சகோதரத்துவத்திற்கும் இந்தியக்குடி என்ற ஒற்றுமை மனோபாவத்திற்குமே பங்கம் விளைவித்திருக்கிறது.
இன்று மக்களாகிய நாம், தீய சக்திகளாகவும், தூய சக்திகளாகவும், இண்டெலெக்சுவலாகவும் தற்குறிகளாகவும், வாரிசுகளாகவும், தன்னந்தனி ஆளு ஆகவும், மற்றும் பலராகவும் பிரிந்து நிற்கிறோம். முகம் தெரியாத நபர்களால் இது நடக்கவில்லை. நமக்கு நம் வீட்டில் அண்ணன் போல், தம்பி போல், அப்பா போல், மாமா போல், பெரியப்பா போல் வலம் வந்த பிம்பம் நம்மை உள்ளிருந்து உடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
இல்லை முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி நீங்கள் மட்டும் கிடையாது. உங்களை விமர்சித்தல் உங்களை மட்டும் விமர்சிப்பதாகும். தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாகாது. மோடி என்றால் இந்தியா, இந்தியா தான் மோடி என்ற பொய்யையெல்லாம் இந்தியர்கள் இனம் கண்டு பல காலம் ஆகிறது. தமிழ்நாடுனா விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. விஜய் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர். அவ்வளவே. சேவகன் என்ற உச்சாணிக்கொம்பை மக்களாகிய நாங்கள் தரவேண்டும். தங்கள் பணி சிறக்கும்பொழுது நாங்களே தருவோம். அதுவரை, தங்கள் பணிசிறக்க பழுப்பு நிற சுமார் சக்தியின் வாழ்த்துக்கள்” என வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















