அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித்தின் AK 64 திரைப்படத்தை முன்னாள் நடிகை மற்றும் அஜித்தின் மனைவியான ஷாலினி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் (ஏகே 64) குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணையவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதை உள்ளிட்ட முன்தயாரிப்பு பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டாலும், எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அஜித்தின் அதிக சம்பளமும் ஏகே 64 படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு தாமதமானதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பேசப்பட்டது. அஜித் கேட்கும் சம்பளத்தை வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டியதால், நீண்ட காலமாக தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை என்று திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூட, அஜித் எதிர்பார்க்கும் சம்பளத்தை வழங்கக்கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மிகக் குறைவாக உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால், ஏகே 64 படத்தின் தயாரிப்பு குறித்த குழப்பம் நீடித்து வந்தது.
தயாரிப்பாளராகும் ஷாலினி
இந்த நிலையில், ஷாலினி தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த ஷாலினி, தற்போது திரைப்பட தயாரிப்பாளராக புதிய இன்னிங்ஸை தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் அடுத்த படமே அவரது முதல் தயாரிப்பாக அமைய வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படம், 'குட் பேட் அக்லி' படத்தை விட இன்னும் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் என்றும், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, அஜித் தனது Ajith Kumar Racing அணியின் சர்வதேச கார் பந்தய நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஐரோப்பிய பந்தயத் தொடர்களில் அவரது அணி தொடர்ந்து பங்கேற்று சர்வதேச அளவில் கவனமீர்த்து வருகிறது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















