EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Central Government EV Subsidy: பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், மின்சார இருசக்கர வாகனங்களுக்காக ரூ.1,000 கோடி தனி மானியத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் எப்படி பயனடைவார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்திற்கு பிரச்னை எழுந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்தன. இதைத் தொடர்ந்து, நாட்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பிஎம் இ-டிரைவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, இத்திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக, அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசின் புதிய நடவடிக்கை என்ன.?
மின்சார இருசக்கர வாகனங்களை (e2W) ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு கூடுதலாக 1,000 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த தொகை, பிரதமரின் இ-டிரைவ் (PM E-DRIVE) திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மின்சார இருசக்கர வாகனங்களுக்கான இந்த ஊக்கத் தொகை, மார்ச் 2028 வரை தொடரும்.
மின்சார இருசக்கர வாகனத் திட்டத்திற்கான ஆரம்ப காலக்கெடு, 2026 ஜூலையில் முடிவடைய இருந்ததாக கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டத்தைத் தொடர்வதற்காக, நிதி அமைச்சகத்திடம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அத்துறை அமைச்சகம் கோரியிருந்தது. இதற்காக நிதி அமைச்சகம் 1,000 கோடி ரூபாக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை.?
மத்திய அரசு, நாட்டில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்க விரும்புகிறது. தற்போது இந்தியாவின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில், மின்சார வாகனங்கள் சுமார் 7.6 சதவீதமாக உள்ளன. இதை குறைந்தபட்சம் 9 முதல் 10 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவிப்பது பொதுமக்களுக்கு பயனளிப்பதோடு, குறுகிய தூரங்களுக்கான இறுதிநிலை இணைப்பையும் மேம்படுத்தும்.
இந்த திட்டம் எப்போது தொடங்கப்பட்டது.?
பிஎம் இ-டிரைவ் திட்டம், 10,900 கோடி ரூபாய் மொத்த பட்ஜெட்டுடன், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம், 2024-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அன்று தொடங்கி, முதலில் 2026 மார்ச் மாதம் வரை செயல்படத் திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர், மத்தி அரசு அதன் கால அளவை நீட்டித்தது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மின்சார இருசக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஊக்கத் தொகையை பெறுகின்றன.
இதை எப்படி பெறுவது.?
நீங்கள் ஒரு மின்சார வாகனத்தை வாங்கும்போது, இந்த மானிய ஊக்கத் தொகையான 5000 ரூபாய் உங்கள் வாகனத்தின் மொத்த விலையில் இருந்து கழிக்கப்படும். அப்படி செய்யப்படவில்லை என்றால், நீங்கள் வாகனத்தை வாங்கும் இடத்தில் மானியம் குறித்து கேளுங்கள். அப்போது, அவர்கள் நிச்சயம் அந்த தொகையை கழிப்பார்கள்.
மேலும், பிரதமரின் இ-டிரைவ் (PM E-DRIVE) பேனரின் முன் உங்களை நிற்க வைத்து, புகைப்படம் எடுத்து, அதை அந்த திட்டத்திற்கான மத்திய அரசின் இணையத்தில் பதிவேற்றிவிடுவார்கள். அப்படி செய்யும்போது, உங்கள் வாகனத்திற்கான மானியத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிடும். அதை செய்யத் தவறினால் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால், மறக்காமல் நீங்கள் வாகனத்தை வாங்கும் இடத்தில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்கவும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















