14 Years of Naadodigal: நண்பர்கள் கூட்டத்திற்கு நல்ல பாடம்.. 14 ஆண்டுகளை நிறைவு செய்த ‘நாடோடிகள்’ ..!
நடிகர், இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘நாடோடிகள்’ படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
![14 Years of Naadodigal: நண்பர்கள் கூட்டத்திற்கு நல்ல பாடம்.. 14 ஆண்டுகளை நிறைவு செய்த ‘நாடோடிகள்’ ..! actor sasikumar's Naadodigal Movie Completed 14 years kollywood 14 Years of Naadodigal: நண்பர்கள் கூட்டத்திற்கு நல்ல பாடம்.. 14 ஆண்டுகளை நிறைவு செய்த ‘நாடோடிகள்’ ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/26/01ce63d3c5ebb6e54142c27db6d686291687718136951572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர், இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘நாடோடிகள்’ படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஹிட் கொடுத்த சமுத்திரகனி
சின்னத்திரையில் தொடர்களை இயக்கி வந்த சமுத்திரகனி 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குநரானார். அதன்பிறகு விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு படமெடுத்தார். ஆனாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. இதனிடையே 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் பிரபலமடைந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கத்தில் இறங்கினார். அந்த படம் தான் ‘நாடோடிகள்’.
எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்த படத்தில் சசிகுமார், பரணி, விஜய் வசந்த், அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயபிரகாஷ், சாந்தினி தேவா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். சுந்தர்.சி பாபு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
மாமன் மகள் அனன்யா கிடைக்க அரசு வேலைக்காக காத்திருக்கும் சசிகுமார், வெளிநாடு செல்லும் ஆசையில் இருக்கும் பரணி, சசிகுமார் தங்கையை காதலித்து, அதேசமயம் சொந்தமாக தொழில் தொடங்கும் விஜய் வசந்த் என மூன்று பேரும் நண்பர்களாக உள்ளனர். இதனிடையே ஊருக்கு வரும் சசிகுமார் நண்பர் ரங்கா சாதியால் காதல் கைகூடவில்லை என தற்கொலைக்கு முயல, 3 நண்பர்களும் அக்காதலை கஷ்டப்பட்டு சேர்க்கிறார்கள். இதில் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் இலட்சியத்தை இழக்கிறார்கள். இதனிடையே அமைதியான வாழ்க்கை வாழ தொடங்கும் நேரத்தில் இவர்கள் சேர்த்து வைத்த காதல் ஜோடி பிரிந்திருப்பதை அறிந்து கோபம் கொள்கிறார்கள். இதற்காக நியாயம் கேட்க போன இடத்தில் அவமானப்படுகிறார்கள். இதற்கு 3 பேரும் எப்படி பழி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக இப்படம் பேசியிருந்தது.
ரசிகர்களைக் கவர்ந்த காம்போ
படத்தின் அடிப்படையே நட்பும், நண்பர்கள் காதலை சேர்ப்பதும் தான் என்பதால் இளைஞர்கள் பட்டாளம் எளிதாக இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. அதேசமயம் இலட்சியம், ஆசைகளை இழப்பது எத்தகைய வலிகளை தரும், உயிரை பணயம் வைத்து ஒருவருக்கு நாம் செய்யும் உதவி துச்சமாக மதிக்கப்படும் போது எப்படி இருக்கும் என காட்சிக்கு காட்சி கைதட்டலோடு நாடோடிகள் காட்டியது. சசிகுமார் - சமுத்திரகனி காம்போவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஃபேவரைட் லிஸ்டில் பாடல்கள்
ஆடுங்கடா, உலகில் யெந்த காதல், யக்கா யக்கா, சம்போ சிவ சம்போ என அத்தனை பாடல்களையும் காலத்திற்கு ஏற்றவாறு சுந்தர்.சி பாபு இசையமைத்துக் கொடுத்திருந்தார். இப்படம் கன்னடம் , தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது . மேலும் இப்படம் பிலிம்பேர் , விஜய் டிவி விருதுகளை வென்றது.
சசிகுமார் மட்டுமல்ல சமுத்திரகனியின் சினிமா கேரியரிலும் ‘நாடோடிகள்’ ஒரு மைல்கல் படமாக என்றைக்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)