Local Body Election| அப்பனே விநாயகா எப்புடியாவது தாமரைய மலர வச்சுடுப்பா - மயிலாடுதுறையில் பாஜக வேட்பாளர்கள் பிரார்த்தனை
நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தாமரை மலர் மாலை அணிவித்து விநாயகரிடம் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்கள்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டன. குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும் இதேபோன்று மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும் ஏற்கப்பட்டன.

தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 105 மனுக்களும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்களும் எவ்வித நிராகரிப்பு இன்றி அனைத்தும் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்த நிலையில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் களம் இறங்கி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி 16 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்திரசேகரன், 6 ஆவது வார்டில் போட்டியிடும் பாரதிகண்ணன் ஆகியோர் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் பாஜக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு தாமரையிலான மாலையை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர். 16 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகரன் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களுக்கு தாமரை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் தாமரை மலரை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல் 6 வது வார்டில் போட்டியிடும் பாரதி கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு தான் போட்டியிடும் சின்னமான தாமரை மலரினை கொடுத்தும் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்




















