விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் கருணை தொகையாக ரூ.10000 வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கலாம் - திருமாவளவன்

“யாரோ எழுதிக் கொடுப்பதையோதான் விஜய் பேசுகிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார்” என்று விசிக தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு மதுரையில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதிமுக ஆட்சிக்கு வராது
அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள். அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூட இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது என வி.சி.க தொடக்க காலத்திலிருந்தே கூறி வருகிறது. இருந்த போதும் திமுக மகளிரை மேம்படுத்துவதற்காக, மாணவச் செல்வங்களுக்கும் மேம்படுத்துவதற்கு உரிமை தொகையாக வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிற அல்லது காலகாலமாக வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற, அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில் மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சிகள் வரவேற்றது.
இதனால் ஏற்படுகிற நிதிச் சுமை என்பது சமாளிக்க தக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை திமுக மேற்கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் மத்திய அரசு மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்துக் கூட தமிழகத்தின் மொத்த உற்பத்தி GDPயை உயரச் செய்து இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. பொருளாதாரத்தை அனைவருக்கும் பரவலாக்கும் வகையில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
யாரோ எழுதிக் கொடுப்பதை பேசும் விஜய்
யாரோ எழுதிக் கொடுப்பதையோதான் விஜய் பேசுகிறார். அவர் தொடக்கத்தில் இருந்து திமுக எதிர்ப்பை மட்டுமே பேசுகிறார். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை வரை அவருக்கு அஜெண்டாவாக உள்ளது திமுக எதிர்ப்பு மட்டும் தான். கொள்கை தலைவர்களாக ஐந்து பேரை அவர் அறிவித்தார். ஆனால் அவர்களின் கொள்கை கோட்பாடுகள் குறித்து அவரின் தொண்டர்களுக்கு இதுவரை கூறவில்லை. அரசியலில் அவரின் நோக்கம் என்ன என்பது இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.
எத்தனை தொகுதியில் போட்டி?
எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பதை தற்போது கூற முடியாது. எது எப்படி இருந்தாலும், எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இயலாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை. ஆனால் எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதி பங்கிட்டால் எந்த சிக்கலும் எங்களுக்குள் இருக்காது.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் வரவேற்பேன்
ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு, விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. அவர் திமுகவில் இணைவார் என சில யூகங்கள் வருகிறது. அவர் திமுகவில் இணைந்தால் அதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.






















