Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
7ஆவது ஆண்டாக பரிக்ஷா பே சார்ச்சா
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் முன்பதிவு செய்தனர். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
இந்த நிலையில் 205.62 லட்சம் அதாவது 2.05 கோடி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ‘’தேர்வு பதற்றம் குறித்து மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
சுற்றியுள்ளவர்கள் செய்வதைப் பற்றி கவலைப்படாதீர்கள். போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள். போதிய உறக்கம் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
அறிவாளிகளை, கடின உழைப்பாளிகளை நண்பர்களாக்கினால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
மாணவர்கள் தங்களை நம்பவில்லை. அவர்களுக்கு குழப்பம் இருப்பது தெரிகிறது. இந்தப் போக்கை மாற்றவேண்டும்.
மாணவர்கள் பிறரைப் போட்டியாக நினைக்காதீர்கள். உங்களுடனே போட்டி போடுங்கள்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

