![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
JEE Advanced Result 2022: 26% ஆகக் குறைந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி: மாணவிகளின் தேர்ச்சியும் குறைவு- முழு விவரம்
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி விகிதம் 26% ஆகக் குறைந்துள்ளது. மாணவிகளின் தேர்ச்சியும் குறைந்துள்ளது.
![JEE Advanced Result 2022: 26% ஆகக் குறைந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி: மாணவிகளின் தேர்ச்சியும் குறைவு- முழு விவரம் JEE Advanced Result 2022 Pass Percentage Rate Down to 26 Percent Female Students Performance Also Low Know Full Details JEE Advanced Result 2022: 26% ஆகக் குறைந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி: மாணவிகளின் தேர்ச்சியும் குறைவு- முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/11/7a494f59120161b067d9d235c41fd2471662882489582332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி விகிதம் 26% ஆகக் குறைந்துள்ளது. மாணவிகளின் தேர்ச்சியும் குறைந்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்றது. முதல் நாள் காலி 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை 1.56 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர்.
தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் இன்று வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் - https://result.jeeadv.ac.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்ச்சி விகிதம்
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் தாள் 1 மற்றும் 2-ஐ 1,55,538 தேர்வர்கள் தேர்வை எழுதிய நிலையில், 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சியைக் காட்டிலும் (30%) இந்த முறை தேர்ச்சி விகிதம் (26.17 %) குறைந்துள்ளது. அதேபோல தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களில் 6,516 பேர் மட்டுமே மாணவிகள் ஆவர்.
பொதுவாக பொதுத் தேர்வுகளில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக தேர்ச்சி பெறும் நிலையில், இந்தத் தேர்வில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
முதல் மதிப்பெண் யார்?
ஆர்.கே.ஷிஷிர் என்னும் மாணவர் 314 மதிப்பெண்களோடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மாணவிகளைப் பொறுத்தவரையில் தனிஷ்கா காப்ரா என்னும் மாணவில் 277 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவரின் அகில இந்திய ரேங்க் 16 ஆக உள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றோர் கவனத்துக்கு
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் Joint Seat Allocation (JoSAA) கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்கள் மூலம் AAT எனப்படும் கட்டிடக்கலை திறன் தேர்வை (AAT 2022) எழுத விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. நாளை (செப்.12) வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டிடக்கலை திறன் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்:
இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! விண்ணப்ப தேதி அறிவிப்பு - விவரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)