ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 'சிறப்பு மதிப்பெண்' அரசாணை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான ‘பணிநிரந்தரம்’ என்பது தற்போதைய திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்திலும் கேள்விக்குறியாகியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், ‘சிறப்பு மதிப்பெண்’ என்ற புதிய அறிவிப்பின் மூலம் அரசு காலங்கடத்துவதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
14 ஆண்டு காலப் போராட்டம்
கடந்த 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களைக் கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 4,773 பணியிடங்கள் காலியான நிலையில், தற்போது 11,773 பேர் மட்டுமே சொற்பத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "எங்களுக்கு முன்பாக இதே பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்கள் காலமுறை சம்பளத்திற்கு மாற்றப்பட்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், அரசின் பல்வேறு துறைகளிலும் தற்காலிகப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஆனால், 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் எங்களை மட்டும் அரசு வஞ்சிப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதி - ஏமாற்றமா?
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 181-வது வரிசையில், "பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்" எனத் திட்டவட்டமாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், அந்த வாக்குறுதி இன்னும் காகித அளவிலேயே இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பணிநிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 23-01-2026 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சிறப்பாசிரியர் தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியாகி 42 நாட்கள் கடந்த நிலையில், தற்போது 06-03-2026 அன்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் உள்ள குளறுபடிகள்
வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி, உடற்கல்வி (3,843), ஓவியம் (3,721), தையல் (1,584), இசை (329) ஆகிய பாடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இப்பட்டியலில் பின்வரும் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது:
* 2,033 கணினி அறிவியல் ஆசிரியர்கள்
* 192 வாழ்க்கைக்கல்வி ஆசிரியர்கள்
* 49 கட்டிடக்கலை ஆசிரியர்கள்
* 22 தோட்டக்கலை ஆசிரியர்கள்
இந்த நான்கு பிரிவுகளைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் வழங்குவது குறித்த எந்தத் தகவலும் அரசாணையில் இடம்பெறவில்லை. இது ஆசிரியர்களிடையே பெரும் பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
தற்போதைய திமுக ஆட்சியில் சிறப்பாசிரியர்களுக்கான தேர்வுகளோ அல்லது புதிய நியமனங்களோ இதுவரை நடைபெறவில்லை. இந்தச் சூழலில், தேர்வு எப்போது நடக்கும், எத்தனை இடங்களுக்கு நடக்கும் என்ற எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லாமல் ‘சிறப்பு மதிப்பெண்’ என்ற அறிவிப்பை வெளியிடுவது கண்துடைப்பு நடவடிக்கை என ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விமர்சித்துள்ளார்.
"நாங்கள் சிறப்பு மதிப்பெண் கேட்கவில்லை, நீங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி பணிநிரந்தரத்தையே கேட்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த இக்கட்டான நேரத்தில், முதல்வர் அவர்கள் ஒரு கொள்கை முடிவை எடுத்து, 11,773 ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். சாக்குப்போக்கு சொல்லி மடைமாற்றம் செய்யாமல், எங்களின் 15 ஆண்டு கால உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமா? அல்லது 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம் தேர்தலுக்குப் பிந்தைய காலத்திற்குத் தள்ளப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























