மேலும் அறிய
தருமபுரி: மர்மமான முறையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி பேருந்து கிளீனர்
பொம்மிடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், பள்ளி பேருந்தின் கிளீனர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்.

தர்மபுரியில் உறவினர்கள் போராட்டம்
பொம்மிடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், பள்ளி பேருந்தின் கிளீனர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராமன்(18). குடும்ப வறுமையின் காரணமாக ராமன் 6ஆம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிறுவயதிலியே ஆங்காங்கே கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்தில் கிளீனராக பணி செய்து வந்தார். இந்நிலையில் வழக்கமாக ராமன் நேற்று காலை மாணவர்களை அழைத்து வந்த பேருந்தில் பள்ளிக்கு வந்த பிறகு பள்ளியில் மற்ற பணிகளை செய்து வந்துள்ளார். அப்போது காலை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் ராமன் மயங்கி விழுந்து இறந்ததாகவும், அவரது உடல் பாப்பிரெட்டிபட்டியில் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளதாக, ராமன் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, ராமன் தோளில் ஏதோ மின்சாரம் தாக்கி கருகியது போல் காயம் இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். மேலும் ராமன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதற்கு பள்ளி நிர்வாகம் அவர் மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினார். இதில் மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ராமன் இறப்பில் மர்மம் உள்ளது. இதனை பள்ளி நிர்வாகம் மறைக்க முயற்சிப்பதாக கூறி, தனியார் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் உறவினர்களை சமாதானம் செய்து தர்ணாவை கலைத்தனர். இறந்த ராமன் உடலில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அடையாளம் இருந்தும், பள்ளி நிர்வாகம் இதனை மறைக்க பார்ப்பதாகவும், இதனை மறைக்கு முயற்சிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தைக்கான நடத்தினார். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ராமன் இறப்பில் உண்மையை மறைப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்























