விழுப்புரத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதம்.. சிலையை சீரமைத்த போலீசார்..
பெரியார் சிலையின் முக பகுதிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம்; சிலை சேதப்படுத்திய சம்பவம் குறித்து மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா நேரில் விசாரணை

விழுப்புரம் நகரின் மையப்பகுதியான கீழ்பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவில் கடந்த 2000-ஆம் ஆண்டு பெரியார் திராவிட கழகத்தினர் புதியதாக பெரியார் சிலை நிறுவி பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் பெரியார் சிலையின் முகப் பகுதி, மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் சேதப்படுத்தியுள்ளனர். நண்பகலில் பெரியார் சிலைக்கு போடப்பட்டிருந்த இரும்பு கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு, மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி சென்று இருப்பதை கண்ட பெரியார் திராவிட கழகத்தினர் விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக,பெரியார் திராவிட கழகத்தினர் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவது, உடைக்கப்படுவதும் அரங்கேறி வருவதாக கண்டன கோஷங்களை எழுப்பி சேதப்படுத்தப்பட்ட சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பெரியார் சிலை உடைப்பு#villupuram @abpnadu #Periyar #Protest pic.twitter.com/Sq95fYuAne
— SIVARANJITH (@Sivaranjithsiva) March 31, 2022
இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சிலை வடிவமைப்பு செய்பவரை அழைத்து வந்து மீண்டும் பெரியாரின் சிலையை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் பெரியாரின் சிலைக்கு புதியதாக வண்ணம் பூசப்பட்டு மாலை அணிவித்து மீண்டும் மரியாதை செலுத்தினர். மேலும் விழுப்புரம் காமராஜர் சாலையில் இருந்த பெரியார் சிலையானது கனரக வாகனம் ஒன்று மோதி முழுவதுமாக சேதமடைந்த நிலையில், இரண்டாவது முறையாக விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

