மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கி பிடித்த பறக்கும் படை தனி வட்டாட்சியர்
மயிலாடுதுறையில் ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்களை பறக்கும் படை தனி வட்டாட்சியர் பிடித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஜெனிட்டாமேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லத்துக்குடி ரேஷன் கடையில் அரிசி கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு விரைந்து சென்றார். அப்போது, கடைக்கு அருகாமையிலேயே இரண்டு நபர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் ஐந்து மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அந்த அரிசி மூட்டைகளை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் இருந்து வாங்கி சென்றது உறுதியானது. இதையடுத்து ஐந்து மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ஜெனிட்டாமேரி அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து கடத்தல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கடையில் சரக்கு இருப்பை கணக்கெடுத்து, ஊழியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் கள்ளச் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்தி கள்ளச் சந்தையில் அரிசி விற்பனை நடைபெறுவதையும் அரிசியை கட்டளையின் தடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















