KT Rajendra Balaji Angry : ’’ஏய்..ஆள் பாத்து போடுவியா டா’’நிர்வாகியை அறைந்த ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை!
’’ஏய் எந்த ஊர்க்காரன் நீ..ஆள் பாத்து சால்வை போடுவியா? கொன்னுடுவேன்’’ என கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிர்வாகியை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் துவக்கத்தில் கேடி ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளிவாள் வழங்கப்பட்டது.மேலும்
பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.
அப்போது வரிசையில் முந்திக் கொண்டு விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஅர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார். இந்நிலையில் திடீரென நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் பலாரென அறைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் தடுக்கவே ’’ஏய் எந்த ஊர்க்காரன் நீ..ஆள் பாத்து சால்வை போடுவியா? கொன்னுடுவேன்’’ என மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை முன்னாள் அமைச்சர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















