அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்
திமுக – அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகள் தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்க அண்ணாமலையே சரியான சாய்ஸாக இருப்பார் என்று பாஜக தேசியத் தலைமை முடிவெடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு வந்தப்போதெல்லாம் மோடியும், அமித் ஷாவும் பேசினர். ஆனால், தமிழ்நாட்டில் மீண்டெழுந்து வந்த பாஜகவிற்கு மீண்டும் இந்த தேர்தல் பேரடியாக இறங்கியிருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் சென்ற நிலையில், இந்த முறை அதன் எண்ணிக்கை 8ஆக கூடும் என்று நம்பியிருந்த பாஜகவினரின் எண்ணத்தில் டன், டன்னாக மண் விழுந்திருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜக தமிழ்நாட்டில் அடுத்தக் கட்டத்திற்கு வளரும் என்ற முடிவை எடுத்த தேசிய பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க முடியும் என்ற கண்டிஷனை போட்டார் எடப்பாடி. வேறு வழியின்றி அதனையும் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலையை அதிரடியாக மாற்றம் செய்தது பாஜக. அவருக்கு பதில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனை பாஜக தமிழக தலைவராக்கியது. ஆனால், கட்சித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அண்ணாமலை ஆதரவாளர்களை ஓரங்கட்டும் பணிகளில் மட்டுமே அவர் மும்முரம் காட்டியிருந்ததாகவும், தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டியதாகவும் அப்போதே பேசப்பட்டது.
குறிப்பாக, அதிமுகவிடம் கறாராக பேசி தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடியாமல் பழைய அதிமுக பாசத்திலேயே நயினார் நாகேந்திரன் கோட்டை விட்டார், இதனால் திமுகவின் முக்கிய தளகர்த்தர்களை எதிர்த்து போட்டியிடவேண்டிய சூழல் பாஜக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது. இது பாஜகவின் வாக்கு சதவீதத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
2021 தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. அப்போது அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து 23 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் 11.24 சதவித வாக்குகளை பாஜக பெற வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அண்ணாமலை. 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தது. தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் கூட இந்த வாக்கு சதவீதத்தை பார்த்து வாயடைத்து போயினர். இது அண்ணாமலையின் தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.
தொடக்கம் முதலே ஆளும் திமுக அரசுக்கு மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை விட அண்ணாமலையே அதிக குடைச்சல்களை கொடுத்து வந்தார். அண்ணாமலையை சமாளிக்க திமுக தலைமையே திணறிய நிலை அப்போது ஏற்பட்டது. குறிப்பாக, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அண்ணாமலை ஆடிய ஆட்டத்தில், அபாயத்திற்கு சென்று திரும்பினார் செந்தில்பாலாஜி. இப்படி அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளால் திமுக Vs அதிமுக என்ற தமிழக அரசியல் களம், திமுக Vs பாஜக என மாறிப்போனது.
ஆனால், அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து பாஜக எப்போது விடுவித்ததோ, அப்போதிலிருந்தே அண்ணாமலை பாஜகவிற்காக கட்டி வந்திருந்த கட்டமைப்பு செங்கல், செங்கல்லாக சரியத் தொடங்கியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த கட்டமைப்பை மண்ணோடு மண்ணாக மாறிப்போயிருக்கிறது.
இந்நிலையில், விஜய் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் அடியோடு மாறிப்போயிருக்கிறது. இப்படியான சூழலில் மீண்டும் பாஜக தமிழ்நாட்டில் அடித்த அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால், அதிரடிக்கு பெயர்போன அண்ணாமலையை மீண்டும் மாநிலத் தலைவராக்க வேண்டும் என்ற குரல்கள் மாநில பாஜகவில் எழத் தொடங்கியிருக்கின்றன.
இதனால் விரைவில் பாஜக மாநிலத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு மீண்டும் அண்ணாமலை வருவார் என்கிறார்கள் அவரின் வரவை எதிர்பார்த்து பாஜகவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர் .
ட்ரெண்டிங் செய்திகள்





















