வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்? "3 மாசத்துல CASE முடிங்க"DVACக்கு நீதிமன்றம் ORDER
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில், அவர் மீதான ஊழல் வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கைத் தற்போது 3 மாதத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது திமுக எம்.எல்.ஏ-வுமான ஆர்.வைத்திலிங்கம், 2011 முதல் 2016 வரையில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில், வீடுகள் கிட்ட அனுமதி கேட்ட தனியார் நிறுவனத்திடம், வைத்திலிங்கம் தனது மகன் நிறுவனத்தின் மூலம் சுமார் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அளித்த புகாரின் அடிப்படையில், வைத்திலிங்கம் மற்றும் அவரின் 2 மகன்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது.
அதைத்தொடர்ந்து 2024 அக்டோபரில், வைத்திலிங்கம் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதில் இணைத்தது.
இந்தச் சூழலில் வைத்திலிங்கம், தற்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரியில் திமுகவில் இணைந்தார். அடுத்த ஒரே மாதத்தில், அவருக்கெதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை முடித்து வைத்தது. அதையடுத்து தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இவ்வாறிருக்க, வைத்திலிங்கம் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டதை ஜூன் மாதம் அறிந்த அறப்போர் இயக்கம், "புகார்தாரருக்கு தெரிவிக்காமலே எப்படி வழக்கை முடித்து வைக்கலாம்" என்று, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதைத்தொடர்ந்து, தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பொறுப்பேற்ற அருண்குமார் ஐ.பி.எஸ், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை செய்யவேண்டியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
வைத்திலிங்கம் திமுக-வில் இணைந்ததும் முடித்து வைக்கப்பட்டு மீதான வழக்கு தற்போது மீதான வழக்கு திமுக ஆட்சியில் முடித்துவைக்கப்பட்டு, தற்போது தவெக ஆட்சியில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருப்பது திமுக-வுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பேசுபொருளாகியிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















