Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தனது சாதியின் பெயரை குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சையான நிலையில் ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது, தவறு செய்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன்.
ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் அடுத்து வெளியாகவுள்ள படம் உஸ்தாத் பகத்சிங். இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். 19ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் தன்னை நாயுடு என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையானது.
அவரது பேச்சுக்கு தமிழ் திரையுலகில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் வாய் தவறி பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார் பார்த்திபன். இதுதொடர்பான அவரது பதிவில் சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.
இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என பதிவிட்டுள்ளார்.























