kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல, தமிழக வீரர் சுப்ரமணி முக்கிய பங்காற்றியுள்ளார்.

kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் ஆடவர் மற்றும் மகளிர் என, இரண்டு பிரிவிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கோ-கோ உலககோப்பையில் இந்தியா அபாரம்:
இந்தியா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை எடிஷனில், 20 அணிகள் பங்கேற்றன. லீக் உள்ளிட்ட சுற்றுகளின் முடிவில் நேற்று டெல்லியில் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. அதில், முதலில் மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நேபாளத்தை 78-40 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றது. அதைதொடர்ந்து, ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியிலும் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளே மோதின. ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, புள்ளிகளை வாரிக்குவித்தது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்தின் முடிவில் 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கோ-கோ அணிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பையில் ஜொலித்த சுப்ரமணி:
எல்லா நேரங்களில் வீரர்கள் தங்களுக்கான விளையாட்டையோ அல்லது விளையாட்டு தனக்கான வீரரையோ தேர்ந்தெடுப்பதில்லை. தற்செயலாகவே எல்லாம் நடந்துவிடுகிறது. அந்த வகையில் தான், தனது மூத்த சகோதரர் கோ கோ விளையாடுவதை கண்டு அதை விளையாட தொடங்கிய சுப்ரமணி, தற்போது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்காக அபார திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பை வெல்வதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ராமநாதபுரத்து கோ-கோ வீரர்:
கோ கோ விளையாட்டு மிகவும் பிரபலமான தமிழ்நாட்டில் உள்ள, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் தான் சுப்ரமணி. கோயம்புத்தூரில் தனது பள்ளி வாழ்க்கையை தொடர்ந்தார். சுப்ரமணிக்கு ஆறாம் வகுப்பு வரை கோ கோ விளையாட்டில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும், அவரது சகோதரர் சரவணன் தான் இந்த விளையாட்டில் ஈடுபட செய்துள்ளார். அவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் தாயார் தினசரி கூலித் தொழிலாளி மட்டுமே. மகனின் கனவை கொண்டு அவர்கள் அஞ்சினாலும், அவரது பாட்டி சுப்ரமணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். எட்டாம் வகுப்பு பயிலும்போதே முதல்முறையாக தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றார். ஆனால், பல்வேறு காரணங்களால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் அவரால் தேசிய போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
விடாமுயற்சியால் உயர்ந்த சுப்ரமணி:
வெளிப்புற சக்திகள் காரணமாகவே சப்-ஜூனியர் அல்லது ஜூனியர் நேஷனல்ஸ் அல்லது கேலோ இந்தியாவில் தான் விளையாடியதில்லை என வேதனையுடன் சுப்ரமணி தெரிவித்துள்ளார். சவால்களை தாண்டி உயர்ந்த சுப்ரமணி, கோயம்புத்தூரில் உள்ள PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தபோது விளையாட்டில் முழு கவனம் செலுத்தினார். அதன்படி, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.
கவனம் ஈர்த்த சுப்ரமணி:
தேசிய அளவில் தகுதி பெற்றதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் நடந்த அல்டிமேட் கோ கோ சோதனைப் போட்டியில் பங்கேற்க சுப்ரமணிக்கு அழைப்பு வந்தது. அதில் அட்டகாசமாக செயல்பட்டதோடு, புனேயில் நடந்த சோதனையிலும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் மூலம் யோத்தாஸ் சி பிரிவிலும் அதனை தொடர்ந்து, ஜயண்ட்ஸுக்கு பி பிரிவுக்கும் அடுத்தடுத்து முன்னேறினார்.
உலகக் கோப்பையிலும் அபாரம்:
அல்டிமேட் கோ கோவின் வருகை அவரது விளையாட்டு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 2022 ஆம் ஆண்டு தொடக்க சீசனில் தெலுங்கு யோதாஸின் ஒரு பகுதியாக சுப்ரமணி இருந்தார். 2023ல் ஜயண்ட்ஸ் அணியால் சுப்ரமணி ஏலத்தில் எடுக்கப்பட்டதோடு, அந்த அணி கோப்பையையும் வென்றது. அதன் தொடர்ச்சியாக, முதல்முறையாக நடைபெற்ற கோ-கோ உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்று சுப்ரமணி அபாரமான திறனை வெளிப்படுத்தினார். காலிறுதிப்போட்டியில் அட்டகாசமாக விளையாடி இலங்கையை வீழ்த்த உதவியதன் மூலம், சிறந்த அட்டாக்கர் விருதையும் வென்றார். சுப்ரமணியின் பங்களிப்புடன், இந்தியா தற்போது உலகக் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

