சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தேதி, தரிசன நேரம் உட்பட முழு விபரம் இதோ..!
ஜனவரி 14ம் தேதி சபரிமலைக்கு 3 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, சபரிமலை ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மறுநாள் (டிசம்பர் 26) மணியோசையும், சரணகோஷங்களும் முழங்க ஐயப்பனுக்கு பிரதான மண்டல பூஜை நடந்தது. தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்ப தரிசனத்திற்குப் பின், அன்றிரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. இதோடு, நவம்பர் 16 முதலான 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவுற்றது.
சபரிமலை மகரஜோதி:
இந்நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மாலை, சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை (Sabarimalai Makara Jothi) நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும். பின், சபரிமலை கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்:
இந்த ஆண்டு மண்டல பூஜை துவங்கியது முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு நேற்று (ஜனவரி 09) இரவு வரை 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில் இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனிடையே, மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால், பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மகரவிளக்கு பூஜை தேதி, நேரம்:
மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி 7 மணி வரை நடைபெற உள்ளது. இதனால், அதற்கு முன்பாக சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம் போர்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 14ம் தேதி 1000 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் ஜனவரி 12ம் தேதியில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. மகரஜோதி தரிசனம் நடைபெறும் ஜனவரி 14ம் தேதி சபரிமலைக்கு 3 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சபரிமலையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

