Trump Vs Pezeshkian: “உங்க அழுத்தத்துக்கு பயந்தெல்லாம் பேச முடியாது“; ட்ரம்ப்புக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரான் அதிபர்
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து, திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அவர் என்னென்ன கூறியுள்ளா.? பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பயந்து, தங்கள் மேல் திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தோல்வியில் முடிந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள் போர் தொடுத்தன. இதைத் தொடர்ந்து, ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்தது. அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்குமாறு கூறி, ஈரானுக்கு பல்வேறு மிரட்டல்களை ட்ரம்ப் விடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன், ஈரானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதல் கட்டமாக, கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அந்த பேச்சுவாத்தை தோல்வியடைந்த நிலையில், கடந்த புதன் கிழமை ட்ரம்ப் அறிவித்த 2 வார போர்நிறுத்தம் முடிவுக்கு வர இருந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாக, திடீரென காலவரையின்றி போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
2-ம் கட்ட பேச்சுவாத்தை ரத்து
இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமையன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதற்காக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் சென்றனர்.
அதேபோல், அமெரிக்கா சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவினர் பாகிஸ்தான் வர இருந்தனர். ஆனால், அந்த பயணத்தை திடீரென ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது.
ஈரான் அதிபர் பதிலடி
இந்த நிலையில், அமெரிக்கா தனது அழுத்தம் கொடுக்கும் கொள்கைகளையும், பிராந்தியத்தில் அதன் ராணுவ இருப்பையும் தொடர்ந்தால், திணிக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பதிலடி கொடுத்துள்ளதாக, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
2-ம் கட்ட பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கடைசி நேரத்தில் ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுடன் தொலைபேசியில் பேசும் போது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அதோடு, அமெரிக்கா போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவும், அது ஐநா சாசனத்திற்கு முரணானது என்றும் பெஷேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரான் தனது தேசிய பாதுகாப்பை பேணுவதில் உறுதியாக உள்ளதாகவும் அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















