Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support "உங்கள மாதிரி இருக்கணும்"
அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்தது விமர்சனத்தில் சிக்கிய நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கீர்த்தனாவுக்கு சப்போர்ட்டுக்கு வந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் கீர்த்தனா. தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை
ஆவணங்கள், ஒப்புதல்கள், தாமதங்கள், காத்திருப்பு ஆகியவற்றை சரிசெய்ய முதலமைச்சர் விஜய் எனக்கு உத்தரவிட்டுள்ளார்
எங்களது அரசாங்கம் மிக விரைவான செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது
21 நாட்களில் அனுமதி, ஒற்றைச் சாளர ஒப்புதல், என்னிடமும் முதலமைச்சரிடமும் நேரடியாக பிரச்னைகளை கொண்டு செல்லும் முறை
மாநிலம் முழுவதும் விரைவு தொழில் மண்டலம் அமைக்கப்படும்
இவை அனைத்திற்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்
உலகம் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அதை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபடுவோம்
செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், AI நகரம்
ட்ரோன் வழித்தடம், மின்சார வாகன உற்பத்தி
பசுமை ஹைட்ரஜன் மற்றும் விண்வெளி பொருளாதாரம்
இந்த வளர்ச்சி 1,2 மாவட்டங்களில் முடங்கிவிடாமல் ஒட்டுமொத்த மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படும்
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற ஒரு சாதகமான சூழலை உருவாக்குவதே முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வை
நான் உடனே தொடங்குவோம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்
இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் சிக்கியது. ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களை அழைத்ததை எதிர் தரப்பினர் விமர்சனம் செய்தனர். இந்தநிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாப் நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் கீர்த்தனாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், ‘முதலீட்டாளர்களை நீங்கள் முன்வந்து அணுகியதை மனதாரப் பாராட்டுகிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழில் துறை அமைச்சரும் தங்கள் மாநிலத்தை தீவிரமாக சந்தைப்படுத்தவும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தை வேகப்படுத்த மாநிலங்கள் இன்னும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை ஊக்கப்படுத்தியுள்ளார். நிச்சயமாக, ஆந்திரப்பிரதேசம் தமிழ்நாடுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். மேலும், தேவையற்ற விமர்சனங்களை அலட்சியப்படுத்துங்கள். சமூக ஊடக விமர்சனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. முதலீடுகள் தான் உருவாக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள அமைச்சர் கீர்த்தனா, ‘நன்றி லோகேஷ். என் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு, நேர்மையுடனும், பணிவுடனும், உறுதியுடனும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன், என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















