திருப்பத்தூர் : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புகுந்து வெறிநாய் கடித்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயம்
தெருநாய் கடித்ததில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் காயம். மருத்துவமனையில் அனுமதி. நாய்களை பிடிக்க நடவடிக்கை வேண்டும் என பெற்றோர் கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது பெரியாங்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடங்கப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியாங்குப்பம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தமிழரசன் இவரது மகன் உதயநிதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றோருவரின் மகளான மாணவி நவியா இருவரும் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்து வந்த தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தல் கடந்த சனிக்கிழமை இப்பள்ளி வேலை நாளாக செயல்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை காலை தாங்கள் பயிலும் தொடக்கப்பள்ளிக்கு சென்ற மாணவன் உதயநிதி, மாணவி நவியா இருவரும் சக மாணவர்களோடு சேர்ந்து தங்களது வகுப்பறையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வகுப்பறைக்குள் புகுந்த தெரு நாய்களில் ஒன்று அங்கு விரையாடிக்கொண்டிருந்தவர்களை கடித்துள்ளது. நாய் கடித்ததில் மாணவன் உதயநிதி, மாணவி நவியா ஆகிய இருவருக்கும் கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் கடி காயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட ஆசிரியர்களும், பொது மக்களும் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் மீட்டு, அச்சமயம் அப்பகுதிக்கு அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் இருந்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தங்களிடம் இதற்க்கான போதிய சிகிச்சை மருந்துகள் இல்லை என்றும் உடனே மேல்சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்ட பின் அங்கும் மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் இன்று (டிச 13) தான் மருத்துவர்கள், நாய் கடித்து படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கத்தொடங்கியுள்ளனர்.

இது குறித்து நாய் கடித்து பதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான தமிழரசன் கூறுகையில், எனது மகன் உதயநிதி பெரியாங்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சனிக்கிழமை (டிச 11) காலை 9.00.மணிக்கு பள்ளிக்கு சென்றவனை 10.00 மணிக்கு பள்ளியில் சுற்றிய தெரு நாய்கள் கடித்துள்ளது. அப்போது அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த நர்சுகள் யாரும் முதலுதவிகூட அளிக்கவில்லை. பின்னர் எனது மனைவி கூறியதை அடுத்து வீட்டுக்கு சென்ற நான் எனது மகனை மீட்பு ஆம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். இங்குமே உரிய சிகிச்சை அளிக்கவில்லை. பள்ளி ஆசிரியர்களை வரச்சொல்லி ஊசிகூட போடாமல் காலதாமதப்படுத்தினர். எனது மகள் ஆபத்தான நிலையில் உள்ளான். இது குறித்து இதுவரை எனது படிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரோ, எங்களது ஊராட்சி மன்ற தலைவரோ யாருமே வந்து நேரில் கூட பார்க்கவில்லை ஒரு ஆறுதல் கூட கூறவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு அருகில் கும்பல் கும்பலாக தெருநாய்கள் சுற்றித்திரிவதாகவும். இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும். இது குறித்து ஏற்க்கனவே புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததான் விளைவே இன்று இரண்டு பள்ளி மாணவர்கள் காயம் அடைய காரணமாய் அமைந்துள்ளது.

ஆகவே இனியாவது பள்ளி நிர்வாகவும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து துவக்கப்பள்ளி அருகில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பெரியாங்குப்பம் மேல் காலணியை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















