Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வு முடிந்த பின்னர் 12ம்ஆ வகுப்பு மாணாக்கர்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கும் காட்சி உண்மையா?

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையை அடித்து உடைப்பது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவ- மாணவிகள் வகுப்பு மேசைகள், பொருட்களை அடித்து நொறுக்குவது போலவும் காகிதங்களை கிழித்து வீசுவது போன்ற காட்சிகளும் அடங்கிய வீடியோ துணுக்குகள் வைரலாகின. இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பக, ''அரசுப் பள்ளி மாணவர்கள் அட்டகாசம். மாணவர்களின் கல்வித் தரம் திமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், செய்முறை தேர்வுகளை முடித்த பிளஸ் 2 மாணவ மாணவியர், தங்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கியுள்ளனர்'' என்று ஒரு பதிவர் கூறி இருந்தார்.
எங்கே செல்கிறது தமிழ்நாடு?
’’தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வு முடிந்த பின்னர் 12ம்ஆ வகுப்பு மாணாக்கர்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கும் காட்சி மனம் பதறுகிறது!
நாளைய எதிர்காலமான மாணவர்கள் இப்படி நடந்துகொள்ள, சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகளும் அவர்கள் கையில் இருக்கும் அலைபேசியும்தான் காரணம் என்றே நான் கருதுகிறேன்.
இந்த காணொலி ஒன்றே போதும், ஆசிரியராக வெட்கித் தலை குனிகிறேன்! எங்கே செல்கிறது தமிழகம்?’’ என்று இன்னொரு பதிவர் கூறி இருந்தார்.
எனினும் இது பழைய காணொலி என்று யுடர்ன் எனப்படும் தனியார் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணாக்கர்கள் தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளை சேதப்படுத்தியதாக பரவுவது பழைய வீடியோவாகும்.
2023ஆம் ஆண்டு வீடியோ
இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். இதற்காக 5 மாணாக்கர்களை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது’’ என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 2023ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் யு டர்ன் இணைத்துள்ளது.
இந்த நிலையில் உண்மை தெரியாமல், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
























