மேலும் அறிய
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே மழை வேண்டி ஒப்பாரி வைத்தும் கொடும்பாவி எரித்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு
’’மழையை நம்பி விதைகளை விதைத்த நிலையில் மழை சரிவர பெய்யாததால் விதைத்த விதைகள் மண்ணிலேயே முளைக்காமல் கெட்டுப்போய்விட்டதாக விவசாயிகள் வேதனை’’

மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் பெண்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் ஆவணி மாதம் கடைசி வாரத்தில் இருந்து பயிரிட்டனர். ஆரம்பத்தில் மழைக்கான அறிகுறி தென்பட்டது. இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து விவசாய பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ராபி பருவத்தின் போதும் முதற்கட்டமாக, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறும், இரண்டாம் கட்டமாக கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரிய காந்தியும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் மழை பெய்தது. இந்தாண்டும் ஆகஸ்ட் மாத கடைசியில் இருந்து அவ்வப்போது தூரல் மழை பெய்து வருகிறது. இதனால், பருவமழை குறிப்பிட்ட காலத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஆகஸ்ட் கடைசியில் இருந்து மானாவாரி நிலங்களில் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வழக்கம்போல் மழை போக்குகாட்டி வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், லேசான தூரலுடன் மழை நின்று போய்விடுகிறது. இதனால் நிலத்தை உழுது, விதை விதைத்து மழைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது: விதைக்கப்பட்ட விதைகள், மண்ணில் அதிக பட்சம் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். மக்காச்சோளம் ஏக்கருக்கு 7 கிலோ வீதம் விதைப்பு செய்யப்படுகிறது. 3.5 கிலோ உடைய ஒரு பை மக்காச்சோளம் 1300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏக்கருக்கு உழவு, விதை, அடி உரமான டிஏபி ஆகியவற்றுக்கு 7 ஆயிரம் வரை செலவாகி விட்டது. தற்போது மழை சரிவர பெய்யாததால் மண்ணில் உள்ள விதைகள் கெட்டு போய்விட்டன. மீண்டும் மறு விதைப்புக்கு 7 ஆயிரம் செலவு செய்ய வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கெனவே கடந்த ஆண்டு பெரும் மழை காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம்.
இயற்கை தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பால் நிவாரணம் வழங்கப்பட்டதில் ஏராளமான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மென்மேலும் பாதிப்பது மிகவும் கவலையாக உள்ளது. எனவே அரசு கடந்த ஆண்டு விடுபட்டு போன வெங்காயம், மிளகாய், கொத்தமல்லிக்கான நிவாரணத்தையும், அனைத்து விவசாய நிலங்களுக்கும் உழவு மானியத்தையும் வழங்க வேண்டும், என தெரிவித்தார்.

மூன்று முறை விதைப்பு செய்தும் முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள கருப்பூர், அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கோட்டூர், மாசார்பட்டி, மாவில்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் மழை பெய்யவில்லை. இதனால் மழைக்கஞ்சி, பொங்கல் வழிபாடு, கிராம எல்லையில் ஆடு பலியிடுதல், கொடும்பாவி எரித்தல் போன்ற நூதன வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விளாத்திகுளம் அருகே மாவில்பட்டி கிராமத்தில் மழை வேண்டி கொடும்பாவியை தெருக்களில் இழுத்து, பயிர்கள் முளைக்கவில்லையே, வாங்கிய கடனை எப்படி அடைப்பது, குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்று கோஷமிட்டபடி ஒப்பாரி வைத்து, கிராம முச்சந்தியில் தீ வைத்து கொளுத்தியும், நூதன முறையில் மழை வேண்டி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement