விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் மெய்சிலிர்க்க பக்தர்கள் வழிபாடு
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை 6 30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திருச்செந்துார் வந்தடைந்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா மஹாலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜையை அவர் நடத்தினார். பின்னர், கீழரதவீதியில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்ற சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கும்பாபிஷேக விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக 20 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்குச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதற்காகத் திருச்செந்தூரில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
30 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான தளத்தில் மடாதிபதிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், விஐபிக்கள் என 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயில் வளாகம் மற்றும் நகர் முழுவதும் 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,500 செவ்வாழை மரங்கள், 5,000 கரும்புகள், 1,500 இஞ்சி குலைகள், பலாப்பழங்கள், மாம்பழம், முந்திரிக் கொத்து, பாக்கு மரங்கள் ஆகியவற்றின் மூலம் கோயில் வளாகமும் உள் பிரகாரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.




















