தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 800 ஊசிகள் பறிமுதல், இருவர் கைது! காவல்துறை அதிரடி
போதை பழக்கங்களால் மன அழுத்தம், மனச்சிதைவு இளைஞர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறும் மருத்துவர்கள் , போதையால் தடம் மாறுபவர்களை கண்காணித்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு 800 போதை ஊசிகள் மற்றும் ரூபாய் 11,300/- ரொக்க பணம், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் போதை வஸ்துகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட காவல்துறை, க்யூ பிரிவு , உளவுத்துறை என அனைத்து பிரிவுகளும் ரவுண்டு கட்டி சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இலங்கைக்கு கடத்தப்படும் பீடி இலை, டீசல் கடத்தப்படுவதை தொடர் கண்காணிப்பில் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். அதையும் மீறி கடத்தலும் தொடரத்தான் செய்கிறது. சமீப காலமாக போதையால் இளைஞர்கள் தடம் மாறும் நிலை அதிகளவில் ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்மதன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் உட்பட போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்வகுமார் (45) மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் ரஹீம் (48) ஆகியோர் என்பதும் அவர்கள் Tramadol Hydrochoride injection 50mg/ml என்னும் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் செல்வகுமார், ரஹீம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மேற்படி Tramadol Hydrochoride injection 50mg/ml-800 போதை ஊசிகள், ரூபாய் 11,300/- ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.





















