Thirumavalavan: இன்று பெரியார், நாளை அம்பேத்கரா? இறங்கி அடிப்போம், சீமானுக்கு திருமா எச்சரிக்கை..!
Thirumavalavan On Seeman: பெரியார் குறித்து தரைக்குறைவாக பேசி வரும் சீமானை, விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Thirumavalavan On Seeman: சீமான் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் செய்து வருவதாக, விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
திருமாவளவன் பேச்சு:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “ இன்றைக்கு தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முளைத்து விட்டார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும் அவர்கள் மூலமாகவே அம்பளமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு அவரை யார் வீழ்த்த வேண்டும் என நினைத்தார்கள் என்பதை நாடு அறியும். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் விழுந்தார்கள். ஆனால் பெரியாரை வீழ்த்த முடியவில்லை. பெரியார் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல.
இன்று பெரியார், நாளை அம்பேத்கரா?
விடுதலை சிறுத்தைகளுக்கும் பெரியார் தான் வழிகாட்டி. கொள்கையாசான். பெரியாரை விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது. பெரியாரையே அன்னியர் என சொல்பவர்கள் அம்பேத்கரை அன்னியர் என சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியார் தமிழர் இல்லை தமிழ் தேசத்தின் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டியர் என சொல்லி அந்நியப்படுத்துவார்கள். இது அரைவேக்கட்டுத்தனமான அரசியல். அற்பத்தனமான அரசியல். இனவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முயற்சி. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக ஆண்ட கட்சியாக இருந்ததால், நாம் இறங்கி போய் பதில் சொல்ல தேவையில்லை என அமைதி காக்கலாம். ஆனால், அப்படி விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்க முடியாது.
பாஜக மீது குற்றச்சாட்டு
நம்முடைய கொள்கை அடையாளங்களை சிதைக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாத்தாக வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சதி முயற்சிகளை தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தை நாளுக்கு நாள் நீர்த்துப் போக செய்கிற வேலையில் ஈடுபட்டுள்ளனர். சிறுபான்மையினருக்கான தனி சட்டத்தை சீர்குலைக்க வக்பு வாரியத்தை ஆக்கிரமிக்க புதிதாக ஒரு சட்டத்தை அடாவடித்தனமாக கொண்டு வருகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய ஒரு அரசு பாஜக அரசு, மோடி அரசு இதனை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டணி மீதான கருத்து
நாளை வக்பு வாரிய சட்டத்தை மீண்டும் அமல்படுத்த போகிறார்கள். அதை எதிர்ப்பது போன்ற ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் பாஜகவுக்கு பாடப் புகட்டவும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணி சிதறடிக்க என்னென்னவோ முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டார்கள் அந்த சதிகளை எல்லாம் முறியடித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி” என திருமாவளவன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே பெரியாரை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரதான மாநிலக்கட்சியான அதிமுக வலுவான கண்டனங்கள் எதையும் பதிவு செய்யவில்லை. இதன் காரணமாகவே சீமானையும், திமுக மற்றும் அதிமுகவையும் திருமாவளவன் சாடியுள்ளார்.





















