மேலும் அறிய
அரசின் கொள்கை முடிவான மதுவிலக்கு மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்
மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

டாஸ்மாக் கடை
சிவகங்கை மாவட்டம், கீழசெவல்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்ட 23 பேர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘கீழச்செவல்பட்டி அம்மன் சன்னதி முதல் தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி கடந்த 2017ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது. இது தொடர்பான புகாரின்பேரில், கீழசெவல்பட்டி போலீசார் என்மீதும் மற்றும் 22 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கையை திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், ‘‘டாஸ்மாக் ஊழியர்களையோ, வேறு யாரையுமோ தாக்கும் நோக்கில் எந்த குற்ற சம்பவமும் நடக்கவில்லை. மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். 14 பெண்கள், 4 மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் இந்த வழக்கில் உள்ளனர். எனவே, திருப்பத்தூர் நீதிமன்றத்திலுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்தத்தை உடனடியாக தூர்வார கோரிய வழக்கு - கோயில் நிர்வாக அதிகாரி பதிலளிக்க உத்தரவு. மதுரை, மணிநகரத்தைச் சேர்ந்த முருகேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயில் வளாகத்தில் லட்சுமி தீர்த்த குளம் உள்ளது.
ஆகம விதிப்படி, மூலவரை தரிசனம் செய்வதற்கு முன், லட்சுமி தீர்த்த குளத்தின் நீரை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். தற்போது லட்சுமி தீர்த்தத்தின் பிரதான மண்டபம் மற்றும் சுற்றுசுவர்களில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. நீர் மாசடைந்துள்ளது. எனவே, லட்சுமி தீர்த்தத்தை உடனடியாக தூர்வாரவும், தீர்த்த மண்டபம் மற்றும் அதன் சுற்றுவர்களை மராமத்து பணியை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு குறித்து கோயில் நிர்வாக அதிகாரி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்























