Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
நாடு முழுவதும் பெட்ரேல், டீசல் தட்டுப்பாடு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், 2004-ல் காங்கிரஸ் அரசு போட்ட ஒரு திட்டத்தால், இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்பேப் இல்லை. அது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு நாடுகளிலும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, சமையல் எரிவாயுவிற்கு சிறிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைத்து வருகிறது. ஆனாலும், அச்சத்தின் காரணமாக மக்கள் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு காரணம், கடந்த 2004-ல், அப்போதைய காங்கிரஸ் அரசின் ஒரு சிறப்பான திட்டம் தான். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு.?
இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளில் தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒருவரையே சார்ந்து இல்லாமல், பல இடங்களிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதன் மூலம் தற்போது இந்தியாவிடம் சுமார் 250 மில்லியன் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமிப்பு உள்ளது. இது, கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரை இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையை தடையின்றி பூர்த்தி செய்யும். மேலும், உலகிலேயே அதிக அளவு கச்சா எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பான திட்டம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த ஒரு முக்கிய முடிவே முக்கிய காரணமாக உள்ளது. 90 காலகட்டங்களில் நடந்த வளைகுடா போர் மற்றும் 2000-மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்கா-தாலிபன் போர் சூழலால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக, 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் Indian Strategic Petroleum Reserves Limited என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், SPR என அழைக்கப்படும் விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய இடங்களில், நிலத்தடி பாறைகளை குடைந்து, பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குகளை அமைத்தது. இந்தக் கிடங்குகள், 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டவை. அவற்றில், இந்தியாவின் சுமார் 9.5 நாட்களுக்கான எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எண்ணெயை சேமிக்க முடியும்.
மேலும், சர்வதேச அளவில் எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைகிறதோ, அப்போதெல்லாம் இந்த நிறுவனம் அதிக அளவில் எண்ணெய்யை வாங்கி, இந்த சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கும். இதோடு, இந்தியாவில் உள்ள IOCL, BPCL, HPCL போன்ற எண்ணெய் நிறுவனங்கள், எப்போதுமே சுமார் 64 முதல் 70 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை தங்கள் சொந்த சேமிப்பு இடங்களிலும், சுத்திகரிப்பு நிலையங்களிலும் வைத்திருக்கும். எண்ணெய் நிறுவனங்களின் இந்த கையிருப்பு காலியானால் மட்டுமே, அரசு தன்னிடம் இருக்கும் SPR கையிருப்பை வழங்கும். ஆனால், இந்த SPR கையிருப்பை வழங்குவதற்கு முன்னரே, கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிடும். மேலும், இந்த SPR கையிருப்பை வழங்குவதற்கு, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது இங்கே முக்கியமானது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாத்தியமில்லை
இந்தியா தற்போது வளைகுடா நாடுகளில் இருந்தே அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அது தடைபட்டுள்ளது. அதனால், கையிருப்பில் இருக்கும் எண்ணெய் காலியாவதற்குள், அதாவது 90 நாட்களுக்குள்(மத்திய அரசு அறிவித்துள்ளது), வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த எண்ணெய்யை இந்தியாவுக்கு கொண்டுவந்து விடும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது தான் உண்மை.























