ஆட்டத்தை ஆரம்பிக்கும் வெயில்: ”4 நாட்களுக்கு 4 டிகிரி வரை அதிகரிக்கும்” - வானிலை மையம்
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களில், 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குளிர்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
15-02-2025 மற்றும் 16-02-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
17-02-2025 முதல் 19-02-2025 வரை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
20-02-2025 மற்றும் 21-02-2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை நாளை (16-02-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கையை பொறுத்தவரை, எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















