ADMK MLA Resign: அதிர்ச்சி! அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - யார்? யார்?
அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சூழலில் வேலுமணிக்கு ஆதரவான 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதிமுக-வில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது புதிய அதிர்ச்சி அந்த கட்சி தொண்டர்களுக்கு உருவாக உள்ளது.
3 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா:
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது அதிமுக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ராஜினாமா கடிதம்:
இந்த 3 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து அளித்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
அதிமுக-வில் நடந்து வரும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் இவர்கள் தற்போது தங்களது எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர்.
யார்? யார்?
மதுராந்தகம் எம்எல்ஏ-வாக இருந்த மரகதம் குமரவேல் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலையை காட்டிலும் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா திமுக வேட்பாளர் இந்திராணியைக் காட்டிலும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெருந்துறை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தைக் காட்டிலும் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக-வில் நடப்பது என்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு அதிமுக கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் மிகவும் குறைந்த தொகுதிகளை வெற்றி பெற்றது. 47 தொகுதிகள் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்த சூழலில் அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் திரும்பினர்.
தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இருந்த நிலையில், யாருக்கும் விஜய் இடம் அளிக்கவில்லை. இந்த சூழலில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஐக்கியமாகி வருகின்றனர். இதனால், அடுத்தடுத்த நாட்களில் அதிமுக-வில் இன்னும் உட்கட்சி மோதல் வெடிக்கும் என்றே கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















