Rameswaram Vande Bharat train : ராமேஸ்வரம்- சென்னை வந்தே பாரத் ரயில் சேவை.! எப்போது தொடங்கும்.? வெளியான முக்கிய தகவல்
Rameswaram-Chennai Vande Bharat train : ராமேஸ்வரத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் சென்றுவரும் நிலையில், வந்தேபாரத் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ரயில் சேவை இயக்குவது தொடர்பாக முக்கிய தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
நவ நாகரீக காலத்தில் சொகுசாக பயணம் செய்ய புதுவகை பேருந்துகள், கார்கள் என வந்தாலும் மக்கள் அதிகம் விரும்பி பயணிப்பது ரயில் சேவையை மட்டும் தான். அந்த வகையில் நாடு முழுவதும் தினந்தோறும் பல ஆயிரம் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள், கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவாக ஒரு ஊருக்கு சென்று சேரும் வகையில் வந்தேபாரத் ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை
இந்த ரயில் சேவை மூலம் சாதாரண ரயில்கள் மூலம் 12 மணி நேர பயணமானது வந்தே பாரத் ரயில் மூலம் 9 முதல் 10 மணி நேரத்திலேயே குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று சேர முடிகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 8 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கின்றன. பெரும்பாலான ரயில் சேவைகள் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளும் நடைபெற்றது.
ராமேஸ்வரம்- சென்னை வந்தேபாரத் ரயில் சேவை
குறிப்பாக ராமேஸ்வரம்- சென்னை இடையே மின் பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. அந்த பணிகளும் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.அந்த வகையில் ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தாம்பரம் – விழுப்புரம் – திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – சிவகங்கை – மானாமதுரை – ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டிருந்தது. இந்த ரயில் காலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் வகையிலும், மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பு இரவு 10.20 மணிக்கு வந்தடையும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது. மேலும் 130 கி.மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில்சேவை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ராமேஸ்வரத்திற்கு எப்போது வந்தேபாரத் ரயில் சேவை
ஜனவரி மாதே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்போது வரை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே எப்போது வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ராமேஸ்வரம்- சென்னை இடையிலான வந்தேபாரத் ரயில் சேவைக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ரயில் சேவை தொடங்கப்படவில்லையென கூறினார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் சென்னை- ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















