இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க... வேளாண் தொழில் தொடங்க ஆசையா ! மானியத்தை அள்ளித்தரும் அரசு
பொதுப்பிரிவினருக்கு 65 சதவீதம் மானியம், அட்டவணை பிரிவினருக்கு 100 சதவீதம் மானியம் வீதம், பட்டதாரிகளுக்கு 3 லட்சம் ரூபாய் மிகாமலும் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி: விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு, மானியத்துடன், வேளாண் சுயதொழில் தொடங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண் தொழில் தொடங்க அறிய வாய்ப்பு
விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு, மானியத்துடன், வேளாண் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல், இயக்குநர்( பயிற்சி வழி தொடர்பு திட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் (பயிற்சி வழித் தொடர்பு திட்டம்) அலுவலகம் உள்ளது. இதன் மூலமாக, வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் வேளாண் தொழில்நுட்ப ஆலேசானை நிலையம் துவங்குவதை ஊக்குவிக்கிறது.
அந்த வகையில், பொதுப்பிரிவினருக்கு 65 சதவீதம் மானியம், அட்டவணை பிரிவினருக்கு 100 சதவீதம் மானியம் வீதம், பட்டதாரிகளுக்கு 3 லட்சம் ரூபாய் மிகாமலும், விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மிகாமலும், வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், சேர ஆர்வமுள்ள, தகுதியானவர்கள், விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் பெற்று கொள்ளலாம். அல்லது https://agri.py.gov.in/news.html இணைய மூலம் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் இணைத்து, அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில், ஜூலை 31ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















