தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ளது. இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் அறிவித்து வருகிறது அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக விருப்பமனு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் -2026 விருப்ப மனுக்கள் 15.12.2025 முதல் 23.12.2025 வரை பெறலாம் என அறிவித்துள்ளார். தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள்,
தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 - செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.





















