மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ராமதாஸ் கடும் கண்டனம்! மதுக்கடைகளை மூட வலியுறுத்தல், கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை!

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக குற்றங்கள் தொடரும் நிலையில், மக்கள் அச்சமின்றி வாழ மதுக்கடைகளை மூடி, கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அருமை, பெருமைபேசி சுகம் காண்பதா?
’’நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். இதனை தடுக்க இயலாத இந்த அரசு தன் அருமை பெருமைகளை பேசி சுகம் காண்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
சென்னை, தாம்பரத்தில் இருந்து மதுராந்தகம் அருகே கீழக்கண்டை கிராமத்திற்கு கடந்த 9-ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் சென்று கொண்டிருந்தபோது, தேவாதூர் அருகே போதையில் இருந்த இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
இதில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பிய நிலையில் அவர்களிடம் சிக்கிய 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிப்புக்கு உள்ளான சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனித்துச் சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
அப்பா என்று கூறுவது வெட்கக்கேடு
நேற்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னை தமிழ்நாட்டின் அப்பா என கூறிக்கொள்வது வெட்கக்கேடு.
இந்த ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் கொடுமைகளில் இவையும் சேர்ந்துள்ளது.
மதுக் கடைகளை நிரந்தரமாக மூடுக
“எரியும் விறகை எடுத்தால்தான் கொதிப்பது அடங்கும்” என்ற முதுமொழிக்கு ஏற்ப இனியாவது மதுவை அறவே ஒழித்து பெண்கள் அச்சமின்றி வாழ அரசு மதுக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் கஞ்சா நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
























