புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. 30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி மே 13-ல் முதல்வராக பதவியேற்க்க உள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்கள், பா.ஜனதா 4, அ.தி.மு.க மற்றும் எல்.ஜே.கே தலா ஒரு இடம் என மொத்தம் 18 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோரல்
ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ-க்களின் பலம் தேவை என்ற நிலையில், கூட்டணிக்கு 18 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ரங்கசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியின் ஒப்புதல் முறைப்படி கிடைத்ததைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி (புதன்கிழமை) ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்க வருமாறு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரவை பங்கீடு: பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் உடன்பாடு
பா.ஜகவுடன் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நடத்திய பேச்சுவார்த்தையில், கடந்த முறையைப் போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்க ரங்கசாமி சம்மதித்துள்ளார். இதன்படி, பா.ஜனதா சட்டமன்றக் கட்சித் தலைவர் நமச்சிவாயம் மற்றும் திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு ஆகியோருக்கு அமைச்சர் பதவி உறுதியாகியுள்ளது. மற்றொரு அமைச்சர் பதவியைப் பெற என்.ஆர். காங்கிரஸின் வி.பி. சிவகொழுந்து மற்றும் டாக்டர் நாராயணசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த முறையைப் போலவே சபாநாயகர் பதவி பா.ஜனதாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறும் விழாவில், ஆளுநர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். முதலமைச்சருடன் முதற்கட்டமாக பா.ஜனதா அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும், மற்றொரு நாளில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த புதிய கூட்டணி ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















