ADMK: சாயப்போகிறதா அதிமுக எனும் ஆலமரம்? காப்பாற்றப்போகும் ஆணிவேர் யார்?
அதிமுக-வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் விஸ்வரூபமாக வெடித்துள்ள நிலையில், அதிமுக-வை காப்பாற்றப்போவது யார்? என்ற மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்றால் அதிமுக-வைத் தவிர்த்து எழுத இயலாது. இந்தியாவிலே தேசிய கட்சிகள் துளியளவு கூட தலைநிமிர முடியாத அளவிற்கு கட்டியமைத்ததில் அதிமுக-வின் பங்கு அளப்பரியது. கடந்த அரைநூற்றாண்டுகளாக தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் திமுக-விற்கு நிகரான ஒரே கட்சியாக திகழ்ந்து வருகிறது.
அதிமுக எனும் ஆலமரம்:
தமிழ் சினிமாவை கட்டியாண்ட எம்ஜிஆரால் கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது அதிமுக. எம்ஜிஆர் எனும் மிகப்பெரிய மக்கள் சக்தியால் திமுக-விற்கு சவால் தந்த அதிமுக-வை அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமை கடந்த கால் நூற்றாண்டுகளாக கட்டிக் காத்தார். தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த கட்சி, தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த கட்சி என்ற பெருமைக்கு சொந்தமான கட்சி அதிமுக.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அதிமுக-வின் ஒரே முகமாக ஜெயலலிதா அக்கட்சியை வழிநடத்திய நிலையில் அவரது மறைவு முதல் தொடங்கியது அக்கட்சியின் வீழ்ச்சி என்றே கூறலாம்.
பூகம்பமாக வெடித்த உட்கட்சி மோதல்:
சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் மோதல், இதற்கு இடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றது, பின்னர் சசிகலா சிறை சென்றது, இதையடுத்து எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைந்தது, பின்னர் இருவரும் பிரிந்தது என பல கட்ட மோதலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்வியால் தற்போது அதிமுக-வில் மீண்டும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.
இந்த முறை ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பூகம்பாக வெடிக்கும் என்றே கருதப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் தலைவர்களுக்காகவே அக்கட்சியின் தொண்டர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தனர். அதன்பின்னர், வந்த எடப்பாடி பழனிசாமியை முந்தைய ஆளுமையின் அளவிற்கு ஏற்காவிட்டாலும் அவரையும் ஏற்றுக்கொண்டு கடந்த கால தேர்தல்களை எதிர்கொண்டனர்.
அதிமுக தொண்டர்கள் வேதனை:
ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக பிளவுபட்டுள்ளது. வெற்றி பெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற தலைவராக அறிவிப்பதற்கு இடைக்கால சபாநாயகரை சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்த சம்பவம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட ஜெயலலிதா - ஜானகி மோதல், ஜெயலலிதா மறைவி்றகு பிறகு ஏற்பட்ட சசிகலா - எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மோதல் என கடந்த 50 ஆண்டுகாலத்தில் இரண்டு முறை பிளவைச் சந்தித்த அதிமுக இன்று 3வது முறையாக பிளவைச் சந்தித்துள்ளது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது.
பலவீனமாகும் தென் தமிழகம்:
ஏனென்றால், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் கொங்கு மற்றும் வட மாவட்டஙகளில் மட்டுமே பிரபலமான அதிமுக தலைவர்கள். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் நீக்கப்பட்ட பிறகு தென் தமிழகத்தில் அதிமுக மிகவும் பலவீனம் அடைந்தது. ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தலைமையை தென் தமிழக அதிமுக-வினர் சிலர் மெல்ல மெல்ல ஏற்கத் தயாராகினர். ஆனால், தற்போது அவர் ஓரங்கட்டப்பட்டால் தென் தமிழகத்தில் மிக மிக பலவீனமான கட்சியாக அதிமுக மாறும் சூழல் உருவாகும்.
காப்பாற்றப்போவது யார்?
இதனால், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் பிரபலமான தலைவர்களாக இருந்தாலும் அவர்களை மொத்த தமிழ்நாட்டில் உள்ள அதிமுக-வினரும் தலைமையாக ஏற்றுக்கொள்வதில் கடுமையான சவால்களும் எதிர்ப்புகளும் இருக்கும் என்றே கருதப்படுகிறது. திமுக-விற்கு மிகவும் வலுவான மற்றும் நிகரான கட்சியாக தவெக தற்போது உருவெடுத்துள்ள நிலையில், அதிமுக மீண்டும் பழைய பலத்துடன் உருவெடுக்கவும், வலுப்பெறவும் நீண்டகாலம் வழிநடத்தும் அளவிற்கு வலுவான தலைமையை அக்கட்சி உருவாக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















