CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் நாளிலேயே பல்வேறு மரபுகளை அவர் உடைத்தெறிந்துள்ளது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தின் 14வது புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவை ஆதரவு கொடுத்த நிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் அந்த மேடையிலேயே விஜய் 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கையெழுத்திட்டார். அதன்படி 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை, போதைப்பொருட்கள் தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு படை ஆகியவை என்ற அறிவிப்புகளில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி மேடையிலேயே பேசிய விஜய் பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்தார். தமிழ்நாட்டின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன், திட்டங்களை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என சொன்னார். அதேசமயம் விஜயின் பேச்சு சினிமா மேடை பேச்சு போல இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விஜய் தமிழ்நாடு அரசியலில் இருந்த பல மரபுகளையும் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே உடைத்துள்ளார்.
- வழக்கமாக வெள்ளை சட்டை என அரசியலுக்கான அடையாளங்களுடன் முதலமைச்சர், அமைச்சர்கள் தமிழ்நாட்டில் பதவியேற்கும் நிலையில், விஜய் கருப்பு நிற கோட் சூட் அணிந்து பதவியேற்றார்.
- பதவியேற்றவுடன் நேராக தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் விஜய் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே கையெழுத்திட்டார்
- தொடர்ந்து எந்த முதலமைச்சரும் பதவியேற்ற மேடையிலேயே பேசுவது வழக்கம் இல்லை. ஆனால் விஜய் கிட்டதட்ட 25 நிமிடங்கள் வரை பேசினார்.
- பதவியேற்பு விழா மேடையில் ராகுல்காந்திக்கு இடம் கொடுக்கப்பட்டது. பதவியேற்றவர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்த நிலையில் இதில் ராகுல்காந்தியும் இடம்பெற்றார்.
- தொடர்ந்து மேடையில் செல்ஃபி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்.
முதலமைச்சராக பதவியேற்றவர்களுக்கு என ஒரு மரபும், வழக்கமும் இருக்கும் நிலையில் அதனைப் பற்றி சிறிதும் எண்ணாமல் விஜய் செய்த செயல் பேசுபொருளாக மாறியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















