Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price Increase: கோடை கால நீரிழப்பை தடுப்பதில் ஏழை மக்களுக்கு எலுமிச்சையே கைகொடுத்து வரும் நிலையில் அதுவும் இல்லை என்றால் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். தற்போது எலுமிச்சை விலை எகிறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு எலுமிச்சை பழம் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தவிக்க வைக்கும் கோடை காலம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடை காலமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் சும்மாவே வெயில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் சொல்லவா வேண்டும். நம் மீது நெருப்பை அள்ளி போட்டது போல வெப்பத்தால் தகிப்போம். தண்ணீர், ஜூஸ் என நீராகாரங்கள் அதிகளவில் எடுப்போம். உடலை குளிர்ச்சியக வைக்க தினம் இருமுறை குளியல், வீட்டில் வெப்பத்தைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளையும் கையாள்வோம். மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஏழைகளின் ஆப்பிள் எலுமிச்சைக்கு வந்த சோதனை
கோடைகாலம் வந்தாலே குளிர்பானம், பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கு மவுசு அதிகமாகி விடும். இந்த சீசன் காலத்தில் தண்ணீர் பாட்டில்கள், ஜூஸ் வகைகள் அதிகளவில் விற்பனையாகும். உடலை குளிர்ச்சியாக வைப்பதே நோக்கம் என்பதால் ஏதேனும் நீராகாரத்தை உள்ளே நாம் செலுத்திக் கொண்டே இருப்போம். அதேபோல் எலுமிச்சை, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், மாம்பழம் ஆகியவை கோடைகால சீசன் பழமாகும். இவற்றின் விலை நம்மை தலை சுற்ற வைக்கும் அளவுக்கு இருக்கும்.
இதில் எலுமிச்சை பழம் ஏழைகளின் தோழன், ஏழைகளின் ஆப்பிள் என பலராலும் அழைக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். அதேசமயம் உடலுக்கு நீரேற்றம் கொடுத்து ஊட்டச்சத்து அளிக்கும் எலுமிச்சையில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடலில் ஏற்படும் கிருமிகளை அழித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இந்த எலுமிச்சையை உடலின் பல்வேறு பிரச்னைகளையும் சரி செய்கிறது.
View this post on Instagram
ஏன் இந்த விலை ஏற்றம்?
கோடை காலம் என்பதால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு எலுமிச்சை ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கோடை கால நீரிழப்பை தடுப்பதில் ஏழை மக்களுக்கு எலுமிச்சையே கைகொடுத்து வரும் நிலையில் அதுவும் இல்லை என்றால் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் 80 கிலோ பை ஒன்றி ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் எலுமிச்சை விலை தங்கத்தை காட்டிலும் மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை ஒரு எலுமிச்சை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















