MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளாக தவெக அறிவித்த சில அறிவிப்புகள் செயல் வடிவம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழக பொறுப்பேற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. அதேசமயம் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பல அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிரடி நடவடிக்கை ஒருபுறமிருக்க தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
அன்றைய நாளில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளாக தவெக அறிவித்த சில அறிவிப்புகள் செயல் வடிவம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை செய்யப்படும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது மற்ற கட்சிகளின் நடவடிக்கைகளையும் மக்கள் கவனிக்கத்தக்க வகையில் மாற்றியுள்ளது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது, தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். நேரலை செய்யப்படும் என்பதால் திமுக எம்.எல்.ஏ.,க்கள் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும். திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேச வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக தவெக அரசின் நிர்வாக தோல்வியை குறிப்பிட்டு விவாதிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் பட்ஜெட் வெளியான பின் அதிலுள்ள குறைகளை பற்றி பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தாக சொல்லப்பட்டுள்ளது.
விஜய் விமர்சனங்களுக்கு பதிலடி கிடைக்குமா?
கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அப்போது கட்சி நிதி பற்றி பேசியவுடன் திமுக வெளிநடப்பு செய்தது. இதனை கரூர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிய விஜய் சட்டசபையின் கதவுகளை அடைக்க வேண்டும் என திமுக வெளியேறியதை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கெல்லாம் சேர்த்து இந்த முறை உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.,க்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தவெக அரசு குறைகளை மக்களிடத்தில் சேர்க்க சட்டசபை கூட்டத்தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என ஸ்டாலின் நினைப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















