திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
சேலத்தில் 6 ஆண்டுகளாக பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் இருப்பது குறித்து தவெக தலித் அமைச்சர்களை மீது பா ரஞ்சித் விமர்சனம் வைத்துள்ளார்

தவெக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்தும் தலித் அமைச்சர்கள் ஏன் எந்த ஒரு தலித் பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள தவெக சேலத்தில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டாமல் இருந்து வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் தவெக அமைச்சரவையில் உள்ள 7 தலித் அமைச்சர்கள் எங்களுடைய பிரதிநிதிகள் இல்லை என்றும் அவர் பகிரங்மாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் சிஜேபி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னை எழும்பூரில் பா ரஞ்சித் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் , அமீர் , நடிகை ஆன்ட்ரியா ஆகியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தேர்வு எதிர்ப்பு குறித்தும் சிஜேபி மாணவர்கள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் தவெக அமைச்சரவையில் உள்ள 7 பட்டியலின அமைச்சர்கள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித்
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடிய மாணவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டது குறித்து பேசிய பா ரஞ்சித் "பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி. அதனால் அது போராட்டத்தை ஒடுக்கதான் செய்யும். ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறது. மாணவர்களை அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? பேட்ச் இல்லாமல் அடிப்பதற்கு கோழைகளா நீங்கள்?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்
தவெகவில் மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றது அனைவரும் பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து பா ரஞ்சித் பேசுகையில் "முதலில் தவெக அமைச்சரவையில் இருக்கும் 8 பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை அமைச்சர் வன்னியரசை தவிர மீதி எந்த அமைச்சராவது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறாரா? இப்படியான ஒருவர் அமைச்சர் ஆனால் என்ன ஆகலனா என்ன. அவரை நீங்கள் அமைச்சர் ஆக்கிக்கொள்ளுங்கள். நல்ல விஷயம். அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.
அமைச்சர் வன்னியரசுக்கு பாராட்டு
வன்னியரசு தோழர் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் சில விஷயங்களை செய்கிறார். அவருக்கும் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் அவரது செய்ல்பாடுகளை பார்த்து நான் வியந்தேன். இந்த மேடையில் அவருக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவிக்க நான் கடமைபட்டிருக்கிறேன்.
சேலத்தில் திறக்கப்படாத அம்பேத்கர் சிலை
ஆனால் தவெகவில் இருக்கக் கூடிய மீதி 7 தலித் அமைச்சர்கள் என்ன செய்தீர்கள். சேலம் மாவட்டத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி வழங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அதை திறக்க முடியவில்லை. அந்த சிலை திறப்பை அரசு சார்பாக விழா ஒருங்கிணைத்து திறப்பு விழா நடத்த வேண்டும். கால்மேல் கால்போட்டபடி அம்பேத்கரின் சிலை இருந்த ஒரே காரணத்திருக்காக, அந்த சிலையை திறக்க விடாமல் செய்கிறார்கள்.
அம்பேத்கர் உங்களுடைய கொள்கைத் தலைவர்தானே? உங்கள் கொள்கைத் தலைவரை மக்கள் இன்னும் சாதி அடிப்படையில் பார்க்கிறார்கள். அதைப் பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வர வேண்டாமா? அப்படியிருக்க, நீங்களே நேரில் சென்று அந்தச் சிலையைத் திறந்து வைக்கலாமே?"
உங்களுக்கு கோபமே வரவில்லையா? அமைச்சரவையில் இருக்கும் அந்த ஏழு தலித் அமைச்சர்களுக்காவது கோபம் வந்ததா? அவர்களுக்குக்கூட கோபம் வரவில்லை என்றால், அவர்கள் எங்களின் பிரதிநிதிகள் அல்ல. எங்கள் சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவர்களும் அல்ல." சாதி ரீதியான மத ரீதியான சமரசங்களொடு தான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வருகிறீர்களா என்பது தான் எங்களுடைய கேள்வி." என பா ரஞ்சித் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















