CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கொடூரமாகத் தாக்கியதை அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி "நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்" என விசாரிக்க மறுத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சிகளும் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20-ம் தேதியன்று போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அப்போது டெல்லி காவல்துறை மாணவர்கள், பெண்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடித் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், டெல்லி காவல்துறையின் இத்தகைய தாக்குதலுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், மனுதாரரின் வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறை
யிட்டார்.அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், "எங்களின் நேரத்தையும், உங்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்" என வழக்கை விசாரிக்க மறுத்தார்.
மேலும், டெல்லி காவல்துறையின் தாக்குதல் வீடியோ தன்னிடம் இருப்பதாக வழக்கறிஞர் கூறியபோது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் "அந்த வீடியோக்களை பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கான எங்களுக்கு நேரமும் இல்லை" என்று மறுத்தார்.
மாணவர்கள், பெண்கள் எனப் போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அது தொடர்பான வழக்கை கூட விசாரிக்க நேரமில்லை என தலைமை நீதிபதி கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இதே தலைமை நீதிபதிதான் கடந்த மே 15-ம் தேதி, ``சில இளைஞர்கள் இங்கே கரப்பான் பூச்சிகளைப்போல இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை, தொழில் இல்லை என்பதால், மீடியா, சமூக வலைதளச் செயற்பாட்டாளர், ஆர்.டி.ஐ ஆர்வலர் என அவதாரம் எடுத்து, அனைவரையும் தாக்க ஆரம்பித்து- விடுகிறார்கள்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் அபிஜித் சிங் என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கில் இளைஞர்களைத் திரட்டி தற்போது மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















