![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
CM Stalin: என்ன லாபம் என்கிறார்கள்? 2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற, திமுக கூட்டணி உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
![CM Stalin: என்ன லாபம் என்கிறார்கள்? 2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின் 200+ constituencies target in 2026 assembly polls Chief Minister Stalin to start work today for dmk caders CM Stalin: என்ன லாபம் என்கிறார்கள்? 2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/372719922c7d4140b4c1c0d6647c3d8a1718180882454732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CM Stalin: கோவை முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு மடல் வெளியிட்டுள்ளார்.
திமுக முப்பெரும் விழா:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அழைப்பு மடலில், “கோவை குலுங்கட்டும்! கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!! அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல். செப்டம்பர் மாதத்தில்தானே முப்பெரும் விழா நடைபெறும் என்று தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் கேட்பது உங்களில் ஒருவனான எனக்கும் கேட்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தீரர்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்தி, கழகம் காக்கும் பணியில் அயராது உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார் நம் உயிரனையத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட விழாவாக ஜூன் 15-ஆம் நாள் கோவை கொடீசியா அரங்கில் இந்த முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது.
யாருக்கான முப்பெரும் விழா..!
இது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமான விழாவோ; அதன் தோழமைக் கட்சிகளுக்கான விழாவோ மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் விழா! அவர்கள் நமக்கு வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா! மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு - ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பதை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக்கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜூன் 15 அன்று கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். கட்டளை கேட்டதும் பாய்கின்ற கணை போல, அறிவிப்பு வெளியானதுமே கழக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழா:
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அவரது நினைவாகப் பயனுள்ள திட்டங்கள், அவரது பெயரிலான பயன்மிகு கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் அவரது உடன்பிறப்புகளாகிய நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய காணிக்கை என்பது, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்தேன். கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஒவ்வொரு நாளும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைக் கவனித்து வந்தேன். உடன்பிறப்புகளாம் உங்களுடைய பணிகள் என் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்தன. எங்கேனும் சில இடங்களில் சற்று சுணக்கமோ சோர்வோ தெரிந்தாலும் உடனடியாக அதனைக் கவனிக்கின்ற இடத்தில் நானும், விரைவாக அதனை சரிசெய்து வெற்றியை உறுதிசெய்கிற பணியில் நீங்களும் இருந்ததால்தான் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்வும் உடன்பிறப்புகளுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது.
40 தொகுதிகளில் வென்று என்ன லாபம்?
ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.
2026ல் 200+ தொகுதிகள் இலக்கு - ஸ்டலின்:
எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்! மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!!” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)