விஜயகாந்துடன் தினகரன் திடீர் சந்திப்பு
சென்னையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தினகரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து தே.மு.தி.க. ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும், இதர வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சென்றுள்ளார். அங்கு அவர் மரியாதை நிமித்தமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது, அவரது உடல்நிலை, தேர்தல் கூட்டணி, பிரச்சார பணிகள் குறித்து விஜயகாந்திடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.





















